விவேகானந்தரின் வாழ்வில் சில நிகழ்ச்சிகள் – பகுதி 3
நரேந்திரரின் தந்தை விசுவநாத தத்தர்.கொடை என்பது அவரது ரத்தத்தில் ஊறிய பண்பாக இருந்தது. அவரிடம் உதவி கேட்டுச் சென்ற யாரும் வெறும் கையுடன் திரும்பியதில்லை.’வள்ளல் விசுவநாதர்’ என்றே அவர் அந்த பகுதியில் அறியப்பட்டார். உறவினர் நண்பர் என்று ஏராளம் பேர் அவரது வீட்டில் தங்கி அவரது செலவிலேய கல்வியும் பெற்று வந்தனர். தாம் மற்றும் தமது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி கவலைப்படாமல், சம்பாதித்ததைஎல்லாம் பிறருக்காகச் செலவழித்தார் அவர்.
ஆனால் விசுவனடரின் இந்தத் தரள குணத்தை உறவினர் சிலர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். அவர்கள் எந்த உழைப்பிலும் ஈடுபடாமல் குடியும் கேளிக்கைக்களுமாகக் காலம் கடத்தினர். இப்படி குடிகாரர்களுக்கும் நெறி கெட்டவர்களுக்கும் பணத்தைத் தந்தை அள்ளி இறைப்பதை ஒருமுறை நரேந்திரர் தடுத்தார்.அதற்க்கு விசுவநாதர்,’மதுவைக் குடித்து, தற்காலிகமாகவாவது தங்கள் கவலைகளை மறக்க முயல்கின்ற இந்த ஏழைகளைப் பற்றி உனக்கு என்ன தெரியும்! நீயும் வளரும்போது இவர்களிடம் இரக்கம் கொள்ளவே செய்வாய்’ என்று கூறினார்.
மனிதனிடம் இத்தகைய இரக்கம் கொள்வது மட்டும் போதாது;அவனைத் தெய்வ வடிவமாகக் கண்டு சேவை செய்ய வேண்டும் என்று கற்பித்தார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். மனிதன் வாழும் கடவுளாகத் திகழ்பவன். கடவுளின் வடிவமான அவனுக்கு இரக்கம் காட்ட முடியுமா? முடியாது.மாறாக, அவனில் வாழ்கின்ற கடவுளுக்குச் சேவை செய்து,வழிபடுவதற்காகக் கிடைத்த ஒரு வாய்ப்பு அல்லவா அது! எனவே ‘இரக்கம்’ என்பது சரியான வார்த்தை அல்ல. மக்களை மகேசனாகக் கண்டு ‘சேவை’ செய்வது, மனித குலத்தையே ஒரு தெய்வீக வெளிப்பாடாக எண்ணி வழிபடுவது – இதுதான் சரியானது. யாரையும் வெறுப்பதர்க்கில்லை. ஏனெனில் பாவியின் உள்ளேயும் உறைபவர் கடவுளே அல்லவா! திருடனாக, காட்டுமிராண்டியாக, அதுபோலவே,நல்லவனாக, சான்றோனாகத் திகழ்வது ஒரே கடவுள்தான்.
இழிந்தவர், ஒதுக்கப்பட்டவர், பாவிகள் என்று அனைவரையும் மரியாதையுடன் பார்ப்பதற்கு இவ்வாறு ஸ்ரீ ராமகிருஷ்ணரிடமிருந்து கற்றுக்கொண்டார் விவேகானந்தர். ‘வேதனையில் தவித்துப் போராடுகின்ற மனிதர்களில் ஒருவருக்காவது சிறுது ஆனந்தமும் அமைதியும் ஒருநாளைக்காவது கொடுக்க முடியுமானால் அதுமட்டுமே உண்மை; வாழ்நாள் முழுவதும் வேதனையில் உழன்று நான் கற்றுக்கொண்ட உண்மை இதுவே’ என்பார் அவர்.
Leave a comment