Feeds:
Posts
Comments

Archive for the ‘வேதாந்தம்’ Category

சாதிப் பிரச்சினை

 

சமூகத்திற்கே சாதி —சமயத்திற்கு அன்று..

சமயத்துறையில் சாதி என்பது கிடையாது. சாதி என்பது ஒரு சமுக ஏற்பாடே ஆகும்.மிக உயர்ந்த சாதியைச் சேர்ந்தவனும் மிக தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவனும் இந்த நாட்டில் துறவி ஆகலாம்.அப்போது இரண்டு சாதியும் சமமாகின்றன.

சாதி முதலிய நமது சமூக ஏற்பாடுகள் சமயத் தொடர்புடையனவாக வெளிக்குத் தோன்றினாலும் உண்மையில் அவை அத்தகையனவல்ல. நம்மை ஒரு தனி சமூகமாக காப்பாற்றி வருவதற்கு அந்த ஏற்பாடுகள் அவசியமாக இருந்து வந்திருகின்றன.தற்காப்புக்கு அவசியம் இல்லை என்னும்போது அவை இயற்கை மரணமடைந்து மறையும்.

கௌதம புத்தர் முதல் ராம்மோகன் ராய் வரையிலும் ( சீர்திருத்த்காரர்) எல்லோரும் ஒரு தவறு செய்திருகிறார்கள். அவர்கள் சாதியை சமயப் பிரிவு என்று கொண்டு சாதி, சமயம் எல்லாவற்றையும் சேர்த்து அழித்திவிட முயன்றார்கள். எனவே அவர்கள் அடைந்தது தோல்வியே ஆகும். ப்ரோகிதர்கள் என்ன பிதற்றினாலும் சரியே, சாதி என்பது ஒரு சமூக ஏற்பாடே என்பதில் சந்தேகமில்லை. அந்தப் பிரிவு தன்னுடைய வேலையை செய்த பின்னர் இப்போது அழுகி நாற்றமெடுத்திருக்கிறது. இந்திய ஆகாய வெளியில் அந்த நாற்றம் நிறைந்துள்ளது.

சாதி ஏற்பாடு வேதாந்த மதத்துக்கு விரோதமானது. சாதி என்பது ஒரு வழக்கமேயல்லாது  வேறில்லை.நமது பெரிய ஆசாரியர்கள் எல்லோரும் அதைத் தாக்க முயன்று இருக்கிறார்கள்.புத்தர் காலத்தில் இருந்து சாதிக்கு எதிராக அநேகர் பிரசாரம் செய்து வந்தார்கள். ஆனால் ஒவ்வொரு முறையுலும் அது வலிமை பெற்று வந்ததேயன்றி வேறு பயனில்லை. இந்தியாவின் அரசியல் அமைப்புகளிருந்து வளர்ச்சி பெற்றதே சாதி ஆகும். அதை பரம்பரையான தொழிற் சங்க முறை என்று சொல்லலாம். ஐரோப்பாவுடன் நேர்ந்த தொழிற் போட்டியானது எந்தப் போதனையும் விட சாதியை அதிகம் தகர்த்து இருக்கிறது..

swamiji 037

சாதிப் பிரச்சினையைத் தீர்க்கும் வழி:

சாதி சண்டைகள் போடுவதில் பயனில்லை. அதனால் நன்மை என்ன? அந்தச் சண்டை நம்மை இன்னும் அதிகமாகப் பிரிக்கும்; இன்னும் அதிகமாக பலவீனபடுத்தும்; இன்னும் அதிகமாக தாழ்த்தும்.சாதி பிரச்சினையை தீர்ப்பதற்கு வழி மேலே உள்ளவர்களைக் கீழே இழுப்பதன்று; கீழே உள்ளவர்களை மேலுள்ளவர்களின் நிலைக்கு உயர்த்துவதே ஆகும்.

 நமது லட்சியத்தின் மேல்படியில் பிராமணன், கீழ்ப்படியில் சண்டாளன். சண்டளானை பிராமண நிலைக்கு உயர்த்துவதே நமது வேலை. உயர் வகுப்பாரின் கடமை தங்களுடைய வீசேஷ உரிமைகளைத் தாங்களே தியாகம் செய்வதாகும். இது எவ்வளவு விரைவில் நடக்கிறதோ அவ்வளவுக்கு நன்மை. தாமதம் ஆக ஆக அவை அதிகமாக கெட்டுக்கொடிய மரணம் அடைகின்றன.

 தான் பிராமணன் என்பதாக உரிமை பாராட்டிக் கொள்ளும் ஒவ்வொருவனும் அவ்வுரிமையை இரண்டு வழிகளில் நிரூபிக்க வேண்டும். முதலாவது தன ஆன்மிக மேன்மையை விளங்க செய்தல்; இரண்டாவது மற்றவர்களைத் தன் நிலைக்கு உயர்த்தல். ஆனால் தற்போது அவர்களின் பலர் பொய்யான பிறவிக் கர்வத்தையே பேணி வருவதாகக் காணப்படுகிறது. பிராமணர்களே ! எச்சரிக்கை ! இது சாவின் அறிகுறி ஆகும்.விழித்தெழுங்கள். உங்களைச் சுற்றியுள்ள பிராமணர் அல்லாதாரை உயர்த்துவதின் மூலம் உங்களுடைய மனிதத் தன்மையையும், பிராமணப் பண்பையும் நிரூபியுங்கள். ஆனால் இதை எஜமானன் என்ற இறுமாப்புடன், குருட்டு நம்பிக்கை கலந்த கர்வத்துடன் செய்ய வேண்டாம். ஊழியன் என்ற தாழ்மை உள்ளதுடன் செய்யுங்கள்.

 பிராமணர்களை நான் வேண்டிக் கொள்வதாவது:

‘உங்களுக்குத் தெரிந்திருப்பதை பிறருக்குக் கற்பியுங்கள். பல நூற்றாண்டு காலமாக நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் ஞானச் செல்வத்தை எல்லாருக்கும் அளியுங்கள்.இவ்வாறு இந்திய ஜாதியை உயர்த்த பெருமுயற்சி செய்யுங்கள்’ என்பதே.உண்மை பிராமணம் எது என்பதை நினைவு கூர்ந்திருத்தல் பிராமணர்களின் கடமை ஆகும். பிராமணனிடம் ‘தர்ம பொக்கிஷம்’ இருப்பதினாலேயே அவனுக்கு இவ்வளவு சிறப்புகளும், விசேஷ உரிமைகளும் அளிக்கப்பட்டுள்ளன என்று மனு சொல்கிறார். பிராமணன் அந்தப் பொக்கிஷத்தைத் திறந்து அதிலுள்ள செல்வங்களை உலகிற்கெல்லாம் பகிர்ந்து கொடுக்க வேண்டும்.

 பிராமணர் அல்லாதாருகெல்லாம் நான் கூறுவதாவது:

‘பொறுங்கள்; அவசரப்பட வேண்டாம். பிராமணனுடன் சண்டையிட எங்கே சந்தர்ப்பம் என்று காத்திராதிர்கள். நீங்கள் கஷ்டப்படுவதற்குக் காரணம் உங்கள் தவறே ஆகும். ஆன்மிக துறையையும், சமஸ்கிரத கல்வியையும் அலட்சியம் செய்யும் படி உங்களுக்கு யார் சொன்னார்கள்? இவ்வளவு காலம் என்ன செய்து கொண்டிருந்தீரிகள்? இத்தனை நாள் அலட்சியமாக இருந்து விட்டு, இப்போது மற்றவர்கள் உங்களை விட அதிகமூளையும், ஊக்கமும், திறமையும் உள்ளவர்களாக இருப்பது குறித்து எரிச்சலடைவதில் யாது பயன்? பயனற்ற விவாதங்களிலும், பத்திரிகைச் சண்டைகளிலும் உங்கள் சொந்த வீடுகளில் வீணான போர் நடத்திப் பாவம் தேடிக் கொள்வதற்குப் பதிலாக பிராமணன் பெற்றிருக்கும் அறிவுச் செல்வத்தை அடைவதில் உங்கள் எல்லாச் சக்திகளையும் பயன்படுத்துங்கள். வழி அதுவே ஆகும்..

 தாழ்ந்த சாதியர்களுக்கெல்லாம் நான் சொல்வதாவது:

‘உங்களுக்கு ஒரே வழி சமஸ்கிருதம் படித்தலே ஆகும். உயர் சாதியார்களிடத்து எரிந்து விழுதலும், அவர்களுடன் சண்டை போடுதலும் பயனளியா. அவ்வழியினால் யாருக்கும் நன்மை இல்லை. அதனால் துரதிர்ஷ்டவசமாக ஏற்கனவே பிரிவினை அதிகமாக உள்ள நமது சமுகத்தில் நாளுக்கு நாள் அதிக வேற்றுமையே ஏற்படும்.உயர் சாதிகளின் வலிமையெல்லாம் அவர்களுடைய கல்வியும், பயிற்சியுமே ஆகும். நீங்களும் அவற்றைக் கைக்கொள்வது என்றே சாதி ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் வழி ஆகும்..

 நீங்கள் ஏன் சமஸ்கிரத பண்டிதர்கள் ஆகக்கூடாது? இந்தியாவிலுள்ள எல்லாச் சாதிகளுக்கும் சமஸ்கிரத கல்வி அளிப்பதற்காக நீங்கள் ஏன் கோடிக்கணக்கான பணம் செலவு செய்யலாகாது?

இவைகளை நீங்கள் செய்து முடிக்கும் போது பிராமணனுடன் சமம் ஆகீறிர்கள். இந்தியாவில் செல்வாக்குப் பெறும் இரகசியம் அதுவே ஆகும் இந்தியாவில் சமஸ்கிரதமும் மரியாதையும் பிரிக்க முடியாதவையாக இருக்கின்றன. நீங்கள் சமஸ்கிரத கல்வி பெற்றவுடன் உங்களுக்கு விரோதமாக யாரும் எதுவும் சொல்லத் துணியார்கள்.

—-சுவாமி விவேகானந்தர் ……..

Read Full Post »

பாரதத்தின் பெருமை !!!

நம் அன்னைபூமியின் தொன்மையையும் உயர்வையும் எத்தனையோ பாடல்களும், உரை நடைகளும் எடுத்துரைத்துள்ளன.  இந்த தேசத்தின் பெருமை அதன் வீரமும் ஞானமும் மிக்க வரலாறு மட்டுமல்ல, அதன் மைந்தர்களாகிய நம்முடைய உயரிய சிந்தனைகளும், பேணி வளர்த்த கலாச்சாரமும்தான். உண்மையில்   இன்றைக்கு நம் பாரத மாதா தளர்வுற்று இருக்கிறாள். ஏனென்றால், நம்முடைய தேசத்தின் வலி மிகுந்த வரலாறும், பெருமை மிக்க ஆக்கங்களும் இன்றைய இளையவர்களுக்கு தெரிய வைக்கப்படவில்லை. சுதந்திர தினம் ஞாயிற்றுக் கிழமையில் வரவில்லை என்ற மகிழ்ச்சிதான் மிகுந்து வருகிறது. செவி வழிச்செய்திகளாக அடுத்தடுத்த தலைமுறைக்கு மாற்றப்பட்டு வந்த மண்ணின் மரபும் வீரமும் ஏதோ ஒரு கட்டத்தில் நூலறுந்து போய்விட்டது போலும். மனம் கூசாமல் தாய் நாடு தரமிழந்து விட்டதாக பேசுகின்றனர்

இன்றைய நிலையிலிருந்து இன்னும் நிலை பிறழாமல் நம் தேசத்தை உணர்ந்து  மீட்டெடுக்கும் கடமை நமக்கு உள்ளது என்பதை உணர்வோம். இந்த தலைமுறையிலோ அல்லது அதற்கு முந்தைய தலைமுறையிலோ தொடர்பு அற்றுவிட்ட தொன்மை பூமிக்கு ஒரு பந்தம் உண்டாக்குவோம். நினைவுகளாய், சிதிலங்களாய் மாறிக் கொண்டிருக்கும் பெருமை மிக்க வரலாற்றினை மீண்டும் தொடர்வோம்.  மொழி, இனம், மதம் வேற்றுமைகளை தாண்டி நம் தேசத்தின் பெருமையினையும், பெருமை மிக்க மைந்தர்களையும் மீண்டும் அடையாளம் காட்ட இந்த தொடர் ஆரம்பிக்கிறது.

ஆதி காலத்தில் இருந்து தொடங்குவோம். சில பெருமைமிக்க செய்திகளை தருகிறேன். கி.முக்களிலேயே அறிவியல், கணிதம், வானவியல், மருத்துவம் ஆகியவற்றில் சிறந்திருந்த நம் மூதாதையர்களின் சிறப்புமிக்க குறிப்புகள் வேதங்களிலும், சித்தர் பாடல்களிலும் ஓலைச்சுவடிகளாக பதியப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு தருகிறேன்.

அறிவியல் :

*சிறப்பான மருத்துவ குறிப்புகளை சித்தர்களின் ஓலைச்சுவடிகளில் காண முடிகிறது. அகஸ்த்தியர் – மூலிகை மருத்துவத்திலும்(microbiology), போகர் – கனிம மருத்துவத்திலும்(chemical components), புலிப்பாணி விலங்குகளை (biotechnology) பயன்படுத்திய மருத்துவ முறைகளிலும் சிறப்பான குறிப்புகள் தந்துள்ளனர். கதிரியக்க குறிப்புகளையும், அணு அளவில் மாற்றங்களை நிகழ்த்தக் கூடிய ரசவாத குறிப்புகளையும் சுவடிகளின் காணமுடிகிறது கி.மு 3000 அணுவின் அமைப்புகளை மாற்றி வேறு ஒரு கனிமமாக மாற்றும் வித்தையை போகர் குறிபிட்டுள்ளார்.

*இரத்தும் உறிஞ்சும் அட்டைகளை(leach) வைத்து இப்போது ஆராய்ச்சிகள் உலக அளவில் நடைபெறுகின்றன. முதல் முதலில் 1020ல்தான் இது பற்றிய ஆராய்ச்சிகள் ஆரம்பித்தன. ஆனால் 2500 வருடங்களுக்கு முன்பே ஆயுர்வேதத்தில் இது பற்றிய குறிப்புகள் உள்ளன. மருத்துவ கடவுளாக கருதப்படும் தன்வந்திரி பகவானின் கையில் மருத்துவ உபகர்ணங்களுடன் leach உள்ளது.

*அகஸ்திய சம்ஹிதா என்ற நூலில் ஒரு மின்சார பெட்டரியை தயாரிக்கும் முறை சொல்லப்பட்டுள்ளது.

வானவியல்:

ரிக் வேதத்தின் குறிப்புகளை கொண்டு கி.பி 1315ல் சாயனாச்சார்ய என்ற விஜய நகரப்பேரரசின் அறிஞர் ஒளியின் வேகத்தை குறிப்பிட்டுள்ளார். “ஓ, சூரிய கடவுளே அரை நிமிஷாவில் 2022 யோசனைகள் கடந்து வரும் உன்னை வணங்குகிறேன்” ஒரு யோசனை என்பது 9 மைல்கள், நிமிஷா என்பது 8/75 வினாடிகள்.. அவருடைய குறிப்பின்படி ஒலிவேகம் -186,413.22 மைல்/வினாடி. நவீன கணிப்பு 186,300மைல்கள்/வினாடி.

*சூரிய கதிர்களில் ஏழு வர்ணங்கள் உள்ளதை கி.மு.1500லேயே ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதையே ஏழு குதிரைகளாக தேரில் பூட்டியுள்ளதாக காட்டினர். நவீன கருத்தின்படி 1671ல் நியூட்டன் முதன்முதலில் ஸ்பெக்டரம் என்று குறிப்பிட்டார்.

*வேதங்களின்படி, ஒரு பூஜையினை செய்வதற்குமுன் சங்கல்பமாக கூறப்படுகின்ற வாக்கியத்தில் உலகம் ஆரம்பித்த நாலில் இருந்து இன்றைய நாளினை குறிக்கிறோம்.”த்விதீய பரார்த்தே, ஸ்வேத வராககல்பே, வைவஸ்வத மன்வந்த்ரே, அஷ்டாவிம்ஸ்திதமே, கலியுகே” என்று வரும். இதன்படி

ஒரு மகாயுகா = 4 யுகங்கள் = 43,20,000 வருடங்கள்

ஒரு மன்வந்திரம் = 30,84,48,000 வருடங்கள் (71 மகாயுகா+1 க்ரேதா யுகம்)

ஒரு கல்பம் = 432,00,00,000 (14 மன்வந்திரம்+1 க்ரேதா யுகம்) அல்லது 1000 மகாயுகம்

ஒரு கல்பம், இதுதான் உலகத்தின் வயதும்.

நவீன முறைப்படி 454,00,00,000 ரேடியோமெட்ரிக் முறையில் கணிக்கப்பட்ட வயது. பூமியுடனேயே பிறந்ததாக சொல்லப்படும் நிலவின் மாதிரி கற்களிலும் ஆராய்ச்சி செய்து இது உறுதிபடுத்தப்பட்டது.

கணிதம்:

கி.மு -3000 – நீளம், எடை ஆகியவற்றை குறிக்கும் அளவீடுகள் வரையறுக்கப்பட்டன.

கி.மு 1500 – வேதகாலம் – வானவியல் கொள்கைகள், கணித வரைபாடுகள், எண்கள் ஆகியன உருவாக்கப்பட்டன.

கி.மு 200 – பூஜ்யம் குறிப்பிடப்பட்டது. அதுவரை நேர்மறை எண்கள்(+) மட்டுமே குறிப்பிடப்பட்டன, எதிர்மறை எண்களையும்(-) குறிப்பிட முடிந்தது.

கி.பி 400 – 1200- கணித சாஸ்திரத்திற்கான முக்கியமான காலகட்டம். கணிதவியல் வல்லுனர்கள் ஆர்யபட்டா, பாஸ்கரா, ஸ்ரீதரா ஆகியோரின் காலம்.

ஆர்யபட்டா ஒரு நாள் என்பது 23 மணிகள்,56 நிமிடங்கள், 4 வினாடிகளும் 0.1 விகிதத்தையும் கொண்டது என்று கணித்தார்.

நவீன கணக்குப்படி 23 மணி,56 நிமிடம்,4 வினாடி மற்றும் 0.091 விகிதம் என்று கணிக்கப்பட்டுள்ளது.அவருடைய ஆர்யபாட்டியா என்ற நூலில் ஒவ்வொருரு கோள்களின் தொலைவும், அது சூரியனை சுற்றி வரும் நாட்களும் நவீன கணிப்புடன் ஒப்பிடும் அளவிற்கு மிகச்சரியாக கூறப்பட்டுள்ளன.

யோகா:

இன்றைக்கு உலகம் முழுவது கொண்டாடிக் கொண்டிருக்கும் யோகாசன முறைகள் பதஞ்சலி முனிவரால் உருவாக்கப்பட்டன. இவர் கி.மு 147ல் வாழ்ந்தவர்.

காஷ்யப ரிஷி – முதன்முதலில் அணு என்ற ஒன்றை குறிப்பிட்டார். அணுவையும்(atom) பிளந்து பரம அணு (ந்யூட்ரான்?) என்று ஒன்று உள்ளதையும் குறிப்பிட்டார்.

Read Full Post »

முதல் மனைவியை நேசியுங்கள்!

ஒரு பணக்கார வணிகனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர்.

வணிகனின் முதல் மனைவி உண்மையான வாழ்க்கைத் துணையாகத் திகழ்ந்தாள். அவனுடைய வீட்டையும், சொத்தையும், வணிகத்தையும் கவனித்துக் கொண்டாள். அவள் அவனை அதிகமாக நேசித்த போதிலும், அவன் அவளை நேசிக்கவில்லை.

ஒருநாள் வணிகன் திடீரென்று நோய் வாய்ப்பட்டு படுக்கையிலிருந்தான். அவன் இறக்கப் போவதை அறிந்து கொண்டான். எனவே அவன், தான் அதிகமாக நேசித்த தன் நான்காவது மனைவியை அழைத்து, “நீ என் அருகில் இருந்து என்னைக் கவனித்துக் கொள்வாயா?” என்று கேட்டான். அவள் என்னல் முடியாது என்று கூறி விட்டுப் போய் விட்டாள். அவள் பதில் அவனை வருத்தியது

கவலையடைந்த அவன் தன் மூன்றாவது மனைவியை அழைத்தான். அதே கேள்வியைக் கேட்டான். அவள், “முடியாது. இவ்வுலக வாழ்க்கை எவ்வளவு இன்பமானது, நீங்கள் இறந்தவுடன் நான் மறுமணம் செய்து கொள்ளலாமென்று இருக்கிறேன்.” என்றாள். இந்த பதிலைக் கேட்ட அவன் இதயம் கல்லானது.

அதன் பிறகு, அவ்வப்போது பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் தன் இரண்டாம் மனைவியை அழைத்து அவளிடமும் அதே கேள்வியைக் கேட்டான். அவளோ, “நான் மிகவும் வருந்துகிறேன். இந்த முறை நான் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. வேண்டுமென்றால் நான் உங்களை நல்ல முறையில் அடக்கம் செய்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அவளுடைய பதிலும் அவனுக்கு இடி தாக்கியது போலிருந்தது.

அவன் கண்களை மூடினான். அப்பொழுது “நான் உங்களுடனே வருவேன், நீங்கள் எங்கே சென்றாலும் நான் உங்களைப் பின்பற்றுவேன்” என்று ஒரு சத்தம் கேட்டது. அது யார் என்று பார்க்க விரும்பி, தன் கண்களைத் திறந்து பார்த்த போது, அவனுடைய முதல் மனைவி நின்று கொண்டிருந்தாள். அவள் உணவு குறைபாட்டால் மிகவும் மெலிந்து போயிருந்தாள். அவன் அவளிடம், நான் நன்றாக இருந்த சமயம், நான் உன்னைக் கவனித்திருக்க வேண்டும் என்றான்.

உண்மையில் இந்த வணிகனைப் போல் நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள் இருக்கிறார்கள்.

1. நான்காவது மனைவி நம்முடைய உடல். அது நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அதற்கு எவ்வளவு நேரம் செலவழித்தாலும், நாம் இறக்கும் போது அது நம்மோடு வராது. நம்மை விட்டுச் சென்று விடும்.

2. மூன்றாவது மனைவி நம்முடைய உடமைகள். சொத்து, பதவி போன்றவை நாம் இறந்த பின்பு வேறொருவருடையவராகி விடுகிறது.

3. இரண்டாவது மனைவி என்பது நம்முடைய குடும்பமும், நண்பர்களும். எவ்வளவுதான் அவர்கள் நம்முடன் நெருக்கமாக இருந்தாலும், அவர்கள் கல்லறை / எரியூட்டுமிடம் வரைதான் நம்முடன் வருவார்கள்.

4. நம்முடைய முதல் மனைவி என்பவள் நம்முடைய ஆன்மா. பொருள், சொத்து மற்றும் சுக போகத்தை நாடும் பொருட்டு அதைக் கவனிக்காமல் விட்டு விடுகிறோம். எனவே சாகும் நேரத்தில் புலம்புகிறோம்.

 எனவே வாழ்க்கையின் உண்மை அறிவோம்,

********************

Read Full Post »

உலகம் முதல் பிரம்மம் வரை

நாம்  கண்ணால்  காண்கிறோம்.  கண்  என்பது  புலன்.  இது புலன்களில்  ஒன்று.  ஐம்புலன்களும்  அகந்தையால் ஏற்படுத்தப்பட்டவை.   புலன்கள்   அகந்தையின்   கருவிகள்.   தவசி கண்மூடி தியானிக்கும்பொழுது புலன்கள் அவிகின்றன. புலன்கள் குவிந்து,   அவிழ்ந்தால்   மனம்   விழித்துக்   கொள்ளும்.   புலன்கள் அவிந்த  பின்  மனம்  தானே  புலனின்றிச்  செயல்படும்.

கண்  மூடியிருக்கும்பொழுது  பார்க்கும்.

காதை  மூடிக்  கொண்டாலும்  கேட்கும்.

தொடாவிட்டாலும்  தொடு  உணர்ச்சியிருக்கும்.

முகராவிட்டாலும்  வாசனை  தெரியும்.

சுவைக்காவிட்டாலும்  ருசி  தெரியும்.

விழிப்படைந்த    மனம்    நிஷ்டையில்    மேலே    போகும். மனத்தினுள்    ஆத்மா   மனோமயப்    புருஷன்        உண்டு. தூய்மையான மனத்தின் ஆத்மா மனத்திலிருந்து விடுதலை பெறும். விடுதலை  பெற்று  உயரும்.  உயரும்  ஆத்மா  பிரம்மத்தை  அறிய அவாவுடையது.   மனம்   பகுதியானது.   பகுக்க   ஏற்பட்ட   கருவி. பிரம்மம் முழுமையானது. முழுமையான பிரம்மத்தைப் பகுதியான மனம்  காண  முடியாது.  பிரம்மத்தின்  ஓர்  அம்சம்,  அல்லது  ஓர் உருவம், ஒரு தோற்றம் மட்டும் தெரியும். அப்படி மனம் பிரம்மத்தைக் காண  முயன்றால்  பிரம்மம்  சச்சிதானந்தமாகத்  தெரியும்.

  • பகுதியான  மனத்தின்  பார்வைக்கு  பிரம்மத்தின் ஓர்  அம்சமாக  சச்சிதானந்தம்  தெரியும்.
  • பிரம்மம்  சச்சிதானந்தமில்லை.
  • சச்சிதானந்தம்  பிரம்மத்தின்  ஒரு  தோற்றம்.
  • சத்து,   சித்து,   ஆனந்தம்   என்ற   மூன்று   அம்சங்களுள்ள சச்சிதானந்தத்தின் ஒரு பகுதியே மனத்தின் பார்வைக்குத் தெரியும்.
  • அப்படிக்   காணும்   ரிஷிகள்   சத்தைக்   கண்டால்,   அதை சச்சிதானந்தத்தின்   ஓர்   அம்சம்   எனக்   கொள்ளாமல்   சத் என்பதையே   முழு   சச்சிதானந்தம்   என்பர்.   அதேபோல்   சித்தை மட்டும்  காண்பவர்களும்,  ஆனந்தத்தை  மட்டும்  காண்பவர்களும் அவற்றையே  முழு  சச்சிதானந்தம்  என்பர்.  மனம்  இப்படி  மட்டும் செயல்படும் தன்மையுடையது.
  • தவத்தின்  உயர்வுக்கேற்ப  சத்  தன்னை  வெளிப்படுத்தும்.
  • சத்  என்பதை  Self  என்று  ஆங்கிலத்தில்  குறிக்கிறார்.
  • இந்த  Selfக்கு  4  நிலைகள்  உள்ளன.
  • முதல்  நிலை  கடந்த  நிலை  Transcendent Self.
  • அடுத்தது  பரமாத்மா  எனும்  Superconscient Self.
  • அதற்கும் அடுத்தது பிரபஞ்சத்தின் ஆத்மா எனும் Cosmic Self.
  • கடைசியானது  அக்ஷரப்  புருஷன்  எனும்  Immutable Self.

கடந்ததை   Self  எனவும்   பிரபஞ்சத்திற்குரியதை   Soul எனவும்   குறிக்கிறார்.   தவத்தின்   நிலைக்கேற்ப   சத்   புருஷன் தன்னைத்   தவசிக்கு   வெளிப்படுத்துகிறான்.   மனிதனிலுள்ள பிரம்மத்தை  self  எனக்  குறிக்கிறார்.  மனிதனுடைய  selfலிருந்து கடந்த நிலையிலுள்ள  Self வரை எல்லாவற்றையும் தழுவும் சொல் spirit, ஆன்மா  எனப்படும்.

முழுமையான   சச்சிதானந்தத்தின்   அம்சங்கள்   பகுதியான மனத்திற்குப்  பிரிந்து  எதிரெதிரானவையாகத்  தெரிவதற்கும்  நல்ல உதாரணம், ஈஸ்வரன்    இது  சச்சிதானந்தத்தின்  முழுமையான  மூன்று அம்சங்களில்    பிரம்மம்,  புருஷன்,  ஈஸ்வரன்    ஒன்று.  சத்திய ஜீவியத்திலிருந்து    பார்த்தால்    ஈஸ்வரன்    முழுமையாகத் தெரிவான்.   இதற்கு   நிர்குணம்,   சகுணம்   இரண்டும்   உண்டு. தெய்வீக  மனத்திலிருந்து  பார்த்தால்  ஒரு  புறம்  நிர்குணமாகவும், அடுத்த  பக்கம்  சகுணமாகவும்  தோன்றும்.

Read Full Post »

கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஏன் கீதையை உபதேசித்தார்?

                அர்ஜுனனுக்கு ஏற்பட்ட எண்ணற்ற சந்தேகங்களுக்கு பகவான் கண்ணன் கூறிய விளக்கங்கள் கீதை என்ற புனித நூலாக மனித சமுதாயத்திற்குக் கிடைத்திருக்கிறது. பகவான் அந்த கீதையை உபதேசித்தது பற்றியே ஒரு சந்தேகத்தை எழுப்பினான், அர்ஜுனன். அர்ஜுனனின் சந்தேகம் என்ன தெரியுமா? ஸ்ரீ கிருஷ்ணர், மனிதகுலம் முழுவதற்குமான மாபெரும் தத்துவச் சுரங்கமாக கீதையை அருளியிருக்கிறார். நுட்பமான அரிய பல உண்மைகளை எடுத்துச் சொல்ல கிருஷ்ணர் நம்மை ஏன் தேர்ந்தெடுத்தார்? பிதாமகர் பீஷ்மரிடம் சொல்லி இருக்கலாம். தத்துவ உபதேசங்களுக்குத் தகுதி வாய்ந்தவர் அவர். ஒரு வேளை, அவர் எதிர்முகாமில் இருப்பதால் அவரைத் தவிர்த்தது நியாயமாக இருக்கலாம். ஆனால் அண்ணன் தருமன் இருக்கிறாரே அவரைவிட கீதையைக் கேட்கப் பொருத்தமானவர் வேறு யார் இருக்க முடியும்? மூத்தவர், தரும நீதிகளை உணர்ந்தவர். அவரை ஏன் கிருஷ்ணர் புறக்கணித்தார் ? அண்ணன் பீமன் வெறும் பலசாலி மட்டுமல்ல; மிகச் சிறந்த பக்திமானும்கூட பூஜா நியமங்களை ஒழுங்காகச் செய்து வருபவர். இப்படி நல்லவர்களை எல்லாம் விட்டுவிட்டு, உலக சுகங்களில் அதிக நாட்டமுள்ளவனும், உணர்ச்சிவசப்பட்டு பல தவறுகளை அடிக்கடி செய்துவிடுபவனும், ஆத்திரக்காரனுமான என்னைப் போய் கீதை போன்ற புனித உபதேசங்களைக் கேட்கத் தகுதி உள்ளவனாக கிருஷ்ணர் கருதியிருக்கிறாரே, இது எவ்வகையில் நியாயம்? அர்ஜுனனின் இந்தச் சந்தேகத்தைக் கேட்டதும் கண்ணபிரான் கூறினார்.

அர்ஜுனா ! நீ என்னோடு நெருங்கிப் பழகுபவன். என் மீது தோழமை கலந்த அன்புடன் இருப்பவன் என்பதால் நான் உனக்கு கீதையைச் சொல்லவில்லை. நீ நினைப்பதுபோல் பிதாமகர் பீஷ்மரை அறங்கள் அனைத்துமுணர்ந்த ஒரு மகாத்மாவாக என்னால் கருதமுடியவில்லை. சாஸ்திரங்கள் உணர்வதால் மட்டும் ஒரு மனிதனுக்கு சிறப்பு வந்துவிடாது; கடைப்பிடித்தால்தான் சிறப்பு. கௌரவர்கள் அதர்மம் புரிகிறார்கள் என்பதறிந்தும் பீஷ்மர் அவர்கள் பக்கமே இருக்கிறார். அதேசமயம் பாண்டவர்களை தனியே பார்க்க நேரும்போது தர்மம் வெல்ல ஆசிர்வதிப்பதாகவும் கூறுகிறார். இது இரட்டை வேடம். ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்வது சாத்தியமற்றது. எண்ணம், சொல், செயல் இவை ஒன்றாக எவனிடம் இணைந்திருக்கிறதோ அவனே உத்தமன். பீஷ்மர் அப்படிப்பட்டவராக இல்லை. தர்மர் கீதை கேட்கத் தகுதியானவர் என்பது உன் எண்ணம். அவர் நல்லவர்தான்.  ஆனால் முன்யோசனை இல்லாதவர். தவறு செய்துவிட்டுப் பிறகு வருந்திக்கொண்டிருப்பது அவர் இயல்பு. தர்மர் நீதியையும் தருமத்தையும் கடைப்பிடிப்பவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவரால் தக்க நேரத்தில் தன் கடமை என்னவென்று உணர இயலவில்லை. பீமனைப் பற்றிச் சொன்னால் பீமன் அளவற்ற பலசாலி. பக்திமானும்கூட. ஆனால் அவனிடம் மனோபலமும் இல்லை; அறிவு பலமும் இல்லை. வீண் கோபத்தில் அவன் விளைவித்த விபரீதங்கள் அநேகம்.

அர்ஜுனா ! நீ இவர்களைப் போன்றவனல்ல மகாவீரன். அதிநுட்பம் வாய்ந்த அஸ்திர வித்தை பல கற்றவன் என்ற போதும்கூட நீ முன் யோசனை உள்ளவனாய் இருக்கிறாய். அதுதான் உன் தனிச்சிறப்பு. இதோ பார், உன்னைவிட வயதான, அறிவிலும் பெரியவர்களான பலரையும் மதித்து நீ இத்தனை வாதிக்கிறாய் என்னிடம். களத்திலே நின்றபோதும் உற்றார், உறவினர் மதிப்பிற்குரிய பெரியோர்களையெல்லாம் எப்படிக் கொல்வது – தேவைதானா இந்த யுத்தமும் இழப்பும் என்றெல்லாம் நீ யோசித்தாய் அத்தனை பேரையும் இழந்து அரசாட்சியைப் பெறுவதால் என்ன பெருமை இருக்க முடியும் என்று கலங்கினாய். பிச்சை எடுத்து வாழவும் நான் தயார் என்று என்னிடம் கூறினாய். நீ பதவி வெறியனல்ல. பழைய விரோதங்களுக்குப் பழி வாங்க வேண்டுமென்று முன்பு நினைத்திருந்தபோதும், களத்தில் அவர்களை மன்னித்து போரே வேண்டாம் என்று எண்ணுகிற உள்ளம் உன்னிடம் இருக்கிறது. ஓரளவு நீதி எது அநீதி எது என்று சிந்திக்கிறனாகவே நீ எந்த தருணத்திலும் இருந்திருக்கிறாய். இதெல்லாம்தான் நான் உனக்கு கீதையை உபதேசிக்கக் காரணங்கள். நீதியான வழியில் நடக்க அனைத்தையும் தியாகம் செய்யும் மனவலிமையும் தேவை. தன்னுடைய புனிதமான கடமையை உணர்பவனுக்குத்தான் கீதை கேட்கும் தகுதி உண்டு. இப்போது புரிகிறதா அர்ஜுனா, நான் உனக்கு கீதை சொல்லக் காரணம் தனிச்சலுகை எதுவுமல்ல; தகுதிச் சிறப்புதான் காரணம். அர்ஜுனன் அப்போதும்கூட அகந்தை எதுவுமற்றவனாய் அடக்கத்தோடு ஸ்ரீகிருஷ்ணரை நோக்கி வணங்கி நின்றான்.

 ************

Read Full Post »

இந்து மதம் கூறும் கருத்துக்கள்

இந்து மதத்தின் அடிப்படையான புனித நூல் எது ? அந்நூல் கூறுவதைச் சுருக்கமாகத் தர முடியுமா?

இந்து மதத்திற்கு ஆதாரமான புனித நூல்கள் வேதங்களாகும். வேதம் என்றால் மெய்யறிவு அல்லது ஞானம். ஸ்ருதி (வெளிப்பட்ட ஒன்று), ஆகமம் (மரபு வழியாக வழங்கப்பட்டது), நிகமம்  (வாழ்கையின் முடிவான பிரச்சனைகளுக்கு தெளிவாகவும் உறுதியாகவும் தீர்வுகள் தருவது) என்ற மூன்று பெயர்களாலும் வேதம் அழைக்கப்படுகிறது. சாதுக்களும் ரிஷிகளும் இறைவனின் அருளால் தங்கள் அனுபூதியில் உணர்ந்து கொண்டவை வேதங்கள்.

வேதங்கள் நான்கு ரிக் , யசுர் ,சாமம் ,அதர்வணம். இவற்றுள் ரிக் வேதம் தான் மிகவும் பழமையானது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் வானியில் விவரங்களை வைத்து குறைந்தது எட்டாயிரம் வருடங்களுக்கு முன் அது எழுதப்பட்டது என்று பாலகங்காதர திலகரும் , பல ஆராய்ச்சியாளர்களும் சொல்லியிருக்கிறார்கள்.

பிரார்த்தனைப் பாடல்களின் தொகுதியே ரிக் வேதம் என்று சொல்லலாம் யாகங்களுக்கான சடங்குகள் மற்றும் வழி முறைகளைப் பற்றியது யசுர் வேதம். ரிக் வேதத்திலிருந்து பல பிரார்த்தனை பாடல்களை பண் அமைத்து இனிமையாக்கித் தருகிறது சாம வேதம். குறிப்பிட்ட சில யாகங்களில் எப்படி எப்படி அவற்றை ஓத வேண்டும் என்றும் வழிகாட்டுகிறது . நம் முடைய மரபு வழி இசைக்குப் பிறப்பிடமே சாம வேதம் தான். ஆரோக்கியமான வாழ்வு மற்றும் நீண்ட ஆயுள் பெறுவது தொடர்பான அறிவியல் துறையான ஆயுர் வேததத்தையும் , பெரும்பாலும் அற நெறிகளையும் உள்ளடக்கிய தொகுப்பு அதர்வண வேதம்.

ஒவ்வொரு வேதமும் மரபுப்படி நான்கு பிரிவுகள் கொண்டது.

1 . மந்திரம் அல்லது சம்ஹிதை
2 . ப்ராம்மணம்
3 . ஆரண்யகம்
4 . உபநிடதம் .

இந்திரன் , வருணன் , விஷ்ணு போன்ற தெய்வங்களை குறித்து  பிரார்த்தனைகளின் தொகுப்பே சம்ஹிதைகள்.  ப்ராம்மணம் என்பதை பிராமணர் என்ற குலத்தோடு தொடர்பு படுத்தி குழப்பக்கூடாது. யாகங்கள் பற்றிய வழி முறைகளை விளக்குவதே ப்ராம்மணம். ஆரண்யகம் என்பது காட்டில் செய்யப்படும் யாக , யக்னங்களை அடிப்படையாக கொண்ட , தியானத்துடன் கூடிய உபாசனைகளை விளக்குகின்றன. தத்துவங்களை ஆராய்ந்து , விளக்கங்கள் தருபவை உபநிடதங்கள். இந்த பிரபஞ்சம் , அதற்கு ஆதராமான பேருண்மை, மனித இயற்கை, வாழ்கையின் குறிக்கோள், அதை அடைவது எப்படி என்பவையெல்லாம் அவற்றில் அடங்கும்.

************

Read Full Post »

சுவாமி விவேகானந்தரும் சீடர்களும்

சுவாமி விவேகானந்தரும் சீடர்களும் உரையாடிக்கொண்டிருந்தார்கள்.
சீடர்: ‘சுவாமி, நானே பிரம்மம் என்றால் நான் ஏன் அதை எப்போதும் உணர்வதில்லை?”
சுவாமி விவேகானந்தர் “உணர்வு நிலையில் அதை அடைய வேண்டுமானால் ஒரு கருவி தேவை. மனமே அந்தக் கருவி. ஆனால் அது ஜடப்பொருள். பின்னால் இருக்கும் ஆன்மாவின் உணர்வினால் அதுவும் உணர்வுடையது போல் தோன்றுகிறது. அதனால் தான் பஞ்சதசியின் ஆசிரியர் “சிச்சாயாவேசத: சக்திச் சேதனேவ விபாதிஸா’- அதாவது உணர்வுப் பொருளான ஆன்மாவின் நிழல் அல்லது பிரதிபலிப்பால் தான் சக்தி அறிவுள்ளது போல் தோன்றுகிறது’ என்று கூறுகிறார்.
அது போல் நம் மனமும் உணர்வுடையது போல் காட்சி அளிக்கிறது. ஆகவே உணர்வின் சாரமாக இருக்கும் ஆன்மாவை மனத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியாது என்பது உறுதி. ஆன்மாவை அறிய நீ மனத்திற்கு அப்பால் செல்ல வேண்டும்.
மனத்தைக் கடந்து வேறு எந்த ஒரு கருவியும் இல்லை. ஆன்மா மட்டுமே இருக்கிறது. அதாவது அங்கே எதை அறிவாயோ அதுவே கருவியின் இடத்தைப் பிடித்துக் கொள்கிறது. அறிபவன், அறிவு, அறியும் கருவி எல்லாம் ஒன்றாகி விடுகின்றன. அதனால் தான் வேதங்கள், ‘அறிபவனை எதனால் அறிவது?’ என்று கேட்கின்றன.
உண்மை என்னவென்றால் உணர்வு நிலைக்கு அப்பால் ஒரு நிலை உள்ளது. அங்கு அறிபவன், அறிவு, அறியும் கருவி என்று எதுவும் இல்லை. மனம் ஒடுங்கும்போது அந்த நிலை உணரப்படுகிறது. ‘உணரப்படுகிறது’ என்று தான் நான் சொல்கிறேன். ஏனென்றால் அந்த நிலையை உணர்த்த வேறு வார்த்தைகள் இல்லை. அனுபவமே தீர்வு.
மேலும் உணர்வுகள் அனுபவிக்கும் பயத்தைப் பற்றி விவேகனந்தர் இப்படிச் சொல்கிறார்.
இன்பத்தில் இருப்பது நோயின் பயம்
உடலில் இருப்பது சாவின் பயம்
உயர் பிறப்பில் சாதி இழத்தலில் பயம்
பணத்தில் இருப்பது கொடுங்கோலின் பயம்
பலத்தில் இருப்பது பகைவர் பயம்
மதிப்பில் அதை இழத்தலின் பயம்
அழகில் இருப்பது மூப்பின் பயம்
குணத்தில் இருப்பது வசையின் பயம்
வாழ்க்கையில் இருப்பது எல்லாம் பயம்
துறவில் தானே பயமே இல்லை!
–சுவாமி விவேகானந்தா …

Read Full Post »

கீதை சொல்லும் பாதை!

         ஒரு ஊரில் வயதான முதியவர் ஒருவர் தன் பேரனுடன் வசித்து வந்தார். தினமும் அதிகாலையில் எழுந்து, சமையலறை மேஜை அருகில் அமர்ந்து, பகவத் கீதை படிப்பது அவர் வழக்கம். அனைத்து விஷயங்களிலும் அவரைப் பின்பற்ற நினைத்த பேரனும், கீதை படிக்க முற்பட்டான். ஒருநாள் தாத்தாவிடம், நானும் உங்களைப்போல் தினமும் பகவத் கீதை படிக்கிறேன். ஆனால், எனக்கு அதன் அர்த்தம் விளங்கவில்லை; புரிந்த கொஞ்சமும், புத்தகத்தை மூடி வைத்ததும் மறந்துவிடுகிறது. இப்படி அதைப் படிப்பதால், எனக்கு என்ன பிரயோஜனம்? என்று கேட்டான். அடுப்பில் கரியைப் போட்டுக்கொண்டிருந்த தாத்தா, அமைதியாக அந்தக் கரிக் கூடையைச் சிறுவனிடம் கொடுத்து, நதிக்குப் போய் இந்தக் கூடையில் நீர் கொண்டு வா என்றார். பேரனும் கூடையுடன் ஆற்றுக்கு ஓடினான். ஆனால், மூங்கில் கூடையில் தண்ணீர் தங்குமா என்ன? அவன் வீடு திரும்புவதற்குள் தண்ணீர் முழுவதும் ஒழுகிவிட்டது. தாத்தா சிரித்துக்கொண்டே, நீ இன்னும் வேகமாக வர வேண்டும் என்று சொல்லி, மறுபடியும் அவனைத் தண்ணீர் எடுத்து வர அனுப்பினார்.

இந்த முறை சிறுவன் வேகமாக ஓடி வந்தான்; ஆனாலும், வீடு சேர்வதற்குள் கூடை காலியாகிவிட்டது. கூடையில் தண்ணீர் கொண்டு வருவது சாத்தியம் இல்லை என்று புரிந்துகொண்ட சிறுவன், வாளி ஒன்றைக் கையில் எடுத்தான். ஆனால் தாத்தாவோ, எனக்கு வாளியில் நீர் வேண்டாம். கூடையில்தான் வேண்டும். நீ இன்னும் தீவிரமாக முயற்சி செய் என்று அவனை மறுபடியும் ஆற்றுக்கு அனுப்பினார். அந்த முறையும் அவனால் தண்ணீர் கொண்டுவர முடியவில்லை. போங்க தாத்தா, இது பயனற்ற வீண் வேலை! என்றான், மூச்சு வாங்கியபடி. அவனைப் பார்த்து புன்னகைத்த தாத்தா, நீ இதைப் பயனற்றது என்கிறாய். ஆனால், கூடையைப் பார், தெரியும் என்றார். பையன் கூடையைப் பார்த்தான். முதல் தடவையாக அது முற்றிலும் வேறாக மாறியிருப்பதைக் கண்டான். பழைய, கரி படிந்த கூடை, இப்போது உள்ளும் புறமும் சுத்தமாகிப் புத்தம் புதியது போல் காணப்பட்டது! தாத்தா சொன்னார்: குழந்தாய்! கீதை படிக்கும்போது இதுதான் நமக்கும் நேர்கிறது. உனக்கு அர்த்தம் புரியாமல் இருக்கலாம்; நினைவில் நிற்காமல் போகலாம். ஆனால், நீ உள்ளும் புறமும் தூய்மையடைந்து முற்றிலும் புதிய மனிதனாகிவிடுவாய்! இது கீதாச்சார்யனான கிருஷ்ண பரமாத்மா, நம் வாழ்வில் நிகழ்த்தும் அற்புதம்!

***********

 

 

 

Read Full Post »

வேதம் ஒரு புத்தகம் அல்ல !!!

தமிழில் வேதத்தை “எழுதாக் கிளவி” என்பார்கள். அதாவது வேதத்தை எழுதி வைத்துப் படிக்க  மாட்டார்கள். வேதத்தைப் பாராயணம் செய்வார்கள். சொல்லும் விதம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுக்கு கவனம் செலுத்துவார்கள். அப்படி உச்ச்சரிக்கபப்டும் ரிக் வேதத்தையே பாட்டாகப் பாடும்போது, இறைவனே நேரில் வருவான் என்பது வேதத்தின் சிறப்பு. இறைவனைக் கவர்வது, வேதக் கருத்தாக இருப்பின், ரிக் வேதம் சொன்னால் கூட இறைவன் வர வேண்டும். ஆனால் அதை சாம கானமாக  இசைக்கப்படும்போது, அந்த  கானத்துக்குத் தான் இறைவன் கவரப் படுகிறார் என்றால், அங்கே பொருள் முக்கியமல்ல, ஓசை நயமே முக்கியம் என்று தெரிகிறது. அமிர்த வர்ஷிணி போன்ற ராகங்கள் இசைக்கப் படும்போது, இயற்கையே கவரப்பட்டு, மழை பொழிகிறது என்று கேள்விப்படுகிறோம். ஆக, ஓசையானது  ஒருவித அதிர்வலைகளை ஏற்படுத்தி அதன் மூலம் வேண்டும் பலன்களைத் தருகிறது என்று தெரிகிறது.

வேதம் என்பது இயற்கையுடன் ஒன்றிய ஒரு விஞ்ஞானம். வேதத்தின் ஆதாரம் அதன் ஓசை நயத்தில் இருப்பதால்தான் அதை வாய்மொழியாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். வேதம் சொல்வதை ‘வேத கோஷம்’ என்பார்கள். கோஷ்டியாக, கூட்டமாகச் சொல்ல வேண்டும். வேதத்தின் ஓசை நயத்தால், பலன் கிடைப்பதை அக்னி ஹோத்திரம் என்னும் ஹோமத்தைப் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சியில் அறிந்துள்ளனர்.

அதிராத்திரம் என்னும் ஹோமத்திலும் அப்படிப்பட்ட விஞ்ஞான ஆராய்ச்சிகள்  நடந்தன.

வேத மந்திரங்கள் சொல்லி நடத்தப்படும் யாகம் என்பதே, ஒரு விஞ்ஞானக் கூடத்தில் செய்யப்படும் பௌதிக அல்லது வேதியல் மாற்றம் போலத்தான். இன்னின்ன மாற்றம் அலல்து பலன் வேண்டுமென்றால், இன்னின்ன வகையில் ஹோமமும், வேத மந்திரம் ஓதப்படுதலும் வேண்டும் என்பதே வேதத்தின் ஆதார பயன். இந்த மந்திரங்களில் இந்திரன், வருணன், சூரியன், அக்கினி என்று பல பெயர்களும் வரும். அர்த்தம் என்று பார்த்தால் பல இடங்களிலும் கோர்வையாக அர்த்தம் இருக்காது. அங்கே அர்த்தத்துக்கு முக்கியத்துவம் இல்லை. ஓசை நயமோ, அதிர்வலைகளோ அல்லது அது போன்ற வேறு எதற்கோ தான் முக்கியத்துவம் இருக்கிறது. இந்து மதத்தை வழி நடத்திச் சென்ற மூன்று ஆச்சர்ய புருஷர்களும்  வேதத்தை எழுதி, அதற்குப் பொருள் சொல்லவில்லை. இதை நாம் நினைவில் வைக்க வேண்டும்.

வேதத்தை யாரும் உருவாக்கவும் இல்லை. எழுதவும் இல்லை. தாங்கள்தான் அதைச் செய்த ஆசிரியர்கள் என்று சொல்லிக் கொள்ளவும்  இல்லை. ஏனென்றால் தியானத்திலும், தவத்திலும் அமிழும் போது தானாகவே அவர்கள் வாயில் புறப்பட்ட சொற்களே வேதம் ஆயிற்று. அவற்றை ஓதும் போது, இயற்கை முதல் இறைவன் வரை அனைத்துமே ஆட்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த ஓதுதல் சுய நலத்துக்ககச்க் செய்யப்படவில்லை. உலக நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் வேதம் ஓதப்பட்டது. அதன் பொருள் அறிந்து அதை ஆராய்ச்சி செய்வது என்பது ஹிந்து மரபில் கிடையாது.

வேதம் சொல்லும் கருத்து என்னவென்று அறிந்து கொள்ள வேண்டும் என்றால், தவம் செய்தவர்களையும், ரிஷிகளையும், ஞானிகளையும் நாடிச் சென்று அவர்களிடமிருந்து அறிந்து கொள்ள வேண்டும். அப்படி எழுந்தது உபநிஷத்துக்கள். வேதம் சொல்லும் ஞானத்தை உபநிஷத்துக்கள் மூலமாகத் தான் அறிய முடியும். அப்படித்தான் அறிந்தனர். வேதம், உபநிஷத்துக்கள் ஆகிய இவை இரண்டுமே செவி வழியாக அறியப்படவே, இவற்றுக்கு சுருதி என்று பெயர். இவற்றை எழுதிப்  படிக்கவில்லை.

வேதம் ஓதுதலும், கட்டுப்பாடான தவ வாழ்கை மேற்கொள்ளுதலும், ஆத்ம ஞானம் தேடுவதற்கு உதவியது. லௌகீக விஷயங்களுக்கு அவை தேவை இல்லை. குறுந்தொகையில் (156) ஒரு பாடல் வரும். பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன் என்னும் பாண்டிய சேனாதிபதி ஒருவர் அதைப் பாடியுள்ளார். அதில் தலைவன், தலைவியைப் பிரிந்து வருந்துவான். அப்பொழுது அங்கே ஒரு பார்ப்பனர் வருகிறார். கையில் புரச மரத்திலிருந்து எடுக்கப்பட்ட தண்டம் என்னும் கோலுடனும், கமண்டலத்துடனும், விரத உணவை உண்பவராகவும்  அந்தப் பார்ப்பனர் சித்தரிக்கப்படுகிறார். அவரிடம் தன் பிரிவாற்றாமைக்கு ஒரு வழி கேட்கலாமா என்று தலைவன் எண்ணுகிறான். அப்புறம் தோன்றுகிறது, இவரைக் கேட்டு என்ன பயன் என்று.தலைவன் சொல்லுகிறான், பார்ப்பன மகனே, பார்ப்பன மகனே, உன்னுடைய எழுதாக் கல்வியில் என் பிரிவுத் துன்பத்துக்கு மருந்து இருக்கிறதா? இல்லையே! என்கிறான்.

ரிக் வேதத்தை ஆராய்ந்து எடுக்கப்பட்ட ஆரிய – திராவிடப் போராட்டத்தை நம்பும் நம் திராவிடத் தலைவர்கள், இந்தப் பாடலை மறந்தது ஏன்?வேதமே எழுதாத கல்வி.அந்தக் கல்வியில்  காதல், லௌகீகம் போன்றவற்றைப் பற்றி ஒன்றும் இல்லை.போரும், அதில் வெற்றியும் பற்றி இருந்தால் இந்த சேனாதிபதி அதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் இருந்திருப்பானா?அது ஆரிய – திராவிடக்  கதை  சொல்லியிருந்தால்,   தமிழர்கள் அதை அன்றே அறிந்திருக்க மாட்டார்களா?

வேதம் என்பது படித்துப் பொருள் சொல்ல அல்ல. அது கதைப் புத்தகமும் அல்ல.அது சரித்திரப் புத்தகமும் அல்ல, அதிலிருந்து நம் சரித்திரத்தைத்  தெரிந்து கொள்ள.தமிழ் வேதம் என்று போற்றப்படும் திருக்குறளே வேதம் எப்படிப்பட்டது, எதற்குப் பயன் படுவது என்பதற்குச் சாட்சி.பொய்யா மொழி என்று திருக்குறளைப் போற்றும் சங்கப் புலவர் வெள்ளி வீதியார், அது செய்யா மொழிக்கு  (யாராலும் இயற்றப்படாத வட மொழி வேதம் ) திரு வள்ளுவர் மொழிந்த பொருள் என்கிறார். (திருவள்ளுவ மாலை).அந்த செய்யா மொழியும் சரி, பொய்யா மொழியும் சரி, ஆரிய- திராவிடப்  போராட்டத்தைச் சொல்லவில்லை.   திருக்குறள் இந்திய சரித்திரம் பற்றிச்  சொல்லவில்லை.
அது போல வேதமும் சரித்திரப் புத்தகம் அல்ல.

வேதம் உதவுவது ஆத்ம ஞானத்துக்கு, இறைவனை அடைவதற்கு. 
அதைப் பிரித்து பொருள் சொல்வது என்பதை ஐரோப்பியரே செய்தனர்.

அவர்களுக்கு இந்திய சரித்திரம் வேண்டுமென்றால், புராண இதிகாசங்களை நாடி இருக்க வேண்டும். அவை தெள்ளத் தெளிவாக நம் பழைய சரித்திரத்தைக் கூறுகின்றன. அவற்றில் இந்த ஆங்கிலேயருக்கும் ஐரோப்பியருக்கும் சுவாரசியம் இல்லை. வேதம் என்பது குறிப்பிட்ட  வாழ்க்கை முறைகளைப்பின்பற்றுபவர்கள்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நியதியை உடைத்து அவர்கள் அதைப் படித்ததினால் வந்த வினை இன்றும் நம்மை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. இதைப் பார்க்கும் போது, காரணமில்லாமல் அந்த நாளில் அப்படிப்பட்ட  நியதிகள் போடவில்லை என்று புரிகிறது. நல்லவன் கையில் வேதம் அமிர்தம். அதுவே சுயநலமிக்க வல்லவன் கையில் ஒரு அம்பாகி விடுகிறது

Read Full Post »

ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்


             கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்று சொல்லலாம். சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன. ஊர்க்கோடியிலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான்! இந்த உயர் காந்த அலைகள் (ஹை மேக்னடிக் வேவ்ஸ்) அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது. அதனால்தான் கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், யந்திரங்கள் பதித்தார்கள். சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளே யந்திரங்கள்! பூமியின் காந்த அலைகளை செப்புத்தகடுகள் உள்வாங்கி சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது. இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல செப்புக்கம்பிகளை உபயோகப்படுத்துகின்றனர். கர்ப்பக்கிருகத்தைப் பிரதட்சணமாக (க்ளாக்வைஸ்) சுற்றும் பக்தர்களின் உடலில், தானாகவே இந்த காந்த சக்தி மென்மையாகப் பாய்கிறது. அடிக்கடி கோயிலுக்கு வந்து பிரதட்சணம் செய்யச் செய்ய இந்த காந்த சக்தி உடலில் கணிசமாக ஏறுகிறது.

இதனால் உடலில் பாஸிடிவ் எனர்ஜி உண்டாகிறது. இந்தச் சக்தி பூரணமாக பக்தர்களைச் சென்றடைவதற்காகவே, மூலஸ்தானம் மூன்று பக்கமும் பெரிய ஜன்னல்கள் இல்லாமல் அடைக்கப்படுகிறது. இதனால் கர்ப்பக்கிருகத்துக்கு வெளியில் நின்று தரிசிக்கும் பக்தர்களின் மேல் யந்திரத்தின் காந்த சக்தி முழுதாகப் பாய முடிகிறது. மூலஸ்தானத்தில் ஏற்றப்படும் விளக்குகள், உஷ்ண சக்தியையும் வெளிச்ச சக்தியையும் பாய்ச்சுகிறது. கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும் பூஜை மந்திரச் சப்தங்களும் சவுண்ட் எனர்ஜி-யைத் தருகின்றன. பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில் ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. இந்தப் பண்டங்கள் எல்லாமே மனித ஆரோக்கியத்துக்கு உதவுவதால், தீர்த்தம் புனிதமானதாக மட்டுமில்லாமல் உடல் வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது. பெருமாள் கோயிலில் மஞ்சளும், குருவாயூரப்பன் கோயிலில் சந்தனமும், சிவன் கோயிலில் திருநீறும், பொதுவாகக் குங்குமமும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இவை எல்லாமே மருத்துவ குணமுடைய வஸ்துக்களை உள்ளடக்கியது.

பெருமாள் கோயிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைக் கற்பூரம், வாசனையாகவும் வித்தியாசமான சுவையுடையதாகவும் இருக்கும். உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டால், நாம் உடனே காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவுகிறோமே பென்சாயின் ! அது வேறொன்றுமில்லை, பச்சைக் கற்பூரக் கலவையில் உருவாவதுதான். கர்ப்பக்கிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள். பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது. கோயில் பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது. அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன. இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது.

நன்றி: http://www.tamilhindu.net/

****************

Read Full Post »

Older Posts »