சாதிப் பிரச்சினை
சமூகத்திற்கே சாதி —சமயத்திற்கு அன்று..
சமயத்துறையில் சாதி என்பது கிடையாது. சாதி என்பது ஒரு சமுக ஏற்பாடே ஆகும்.மிக உயர்ந்த சாதியைச் சேர்ந்தவனும் மிக தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவனும் இந்த நாட்டில் துறவி ஆகலாம்.அப்போது இரண்டு சாதியும் சமமாகின்றன.
சாதி முதலிய நமது சமூக ஏற்பாடுகள் சமயத் தொடர்புடையனவாக வெளிக்குத் தோன்றினாலும் உண்மையில் அவை அத்தகையனவல்ல. நம்மை ஒரு தனி சமூகமாக காப்பாற்றி வருவதற்கு அந்த ஏற்பாடுகள் அவசியமாக இருந்து வந்திருகின்றன.தற்காப்புக்கு அவசியம் இல்லை என்னும்போது அவை இயற்கை மரணமடைந்து மறையும்.
கௌதம புத்தர் முதல் ராம்மோகன் ராய் வரையிலும் ( சீர்திருத்த்காரர்) எல்லோரும் ஒரு தவறு செய்திருகிறார்கள். அவர்கள் சாதியை சமயப் பிரிவு என்று கொண்டு சாதி, சமயம் எல்லாவற்றையும் சேர்த்து அழித்திவிட முயன்றார்கள். எனவே அவர்கள் அடைந்தது தோல்வியே ஆகும். ப்ரோகிதர்கள் என்ன பிதற்றினாலும் சரியே, சாதி என்பது ஒரு சமூக ஏற்பாடே என்பதில் சந்தேகமில்லை. அந்தப் பிரிவு தன்னுடைய வேலையை செய்த பின்னர் இப்போது அழுகி நாற்றமெடுத்திருக்கிறது. இந்திய ஆகாய வெளியில் அந்த நாற்றம் நிறைந்துள்ளது.
சாதி ஏற்பாடு வேதாந்த மதத்துக்கு விரோதமானது. சாதி என்பது ஒரு வழக்கமேயல்லாது வேறில்லை.நமது பெரிய ஆசாரியர்கள் எல்லோரும் அதைத் தாக்க முயன்று இருக்கிறார்கள்.புத்தர் காலத்தில் இருந்து சாதிக்கு எதிராக அநேகர் பிரசாரம் செய்து வந்தார்கள். ஆனால் ஒவ்வொரு முறையுலும் அது வலிமை பெற்று வந்ததேயன்றி வேறு பயனில்லை. இந்தியாவின் அரசியல் அமைப்புகளிருந்து வளர்ச்சி பெற்றதே சாதி ஆகும். அதை பரம்பரையான தொழிற் சங்க முறை என்று சொல்லலாம். ஐரோப்பாவுடன் நேர்ந்த தொழிற் போட்டியானது எந்தப் போதனையும் விட சாதியை அதிகம் தகர்த்து இருக்கிறது..
சாதிப் பிரச்சினையைத் தீர்க்கும் வழி:
சாதி சண்டைகள் போடுவதில் பயனில்லை. அதனால் நன்மை என்ன? அந்தச் சண்டை நம்மை இன்னும் அதிகமாகப் பிரிக்கும்; இன்னும் அதிகமாக பலவீனபடுத்தும்; இன்னும் அதிகமாக தாழ்த்தும்.சாதி பிரச்சினையை தீர்ப்பதற்கு வழி மேலே உள்ளவர்களைக் கீழே இழுப்பதன்று; கீழே உள்ளவர்களை மேலுள்ளவர்களின் நிலைக்கு உயர்த்துவதே ஆகும்.
நமது லட்சியத்தின் மேல்படியில் பிராமணன், கீழ்ப்படியில் சண்டாளன். சண்டளானை பிராமண நிலைக்கு உயர்த்துவதே நமது வேலை. உயர் வகுப்பாரின் கடமை தங்களுடைய வீசேஷ உரிமைகளைத் தாங்களே தியாகம் செய்வதாகும். இது எவ்வளவு விரைவில் நடக்கிறதோ அவ்வளவுக்கு நன்மை. தாமதம் ஆக ஆக அவை அதிகமாக கெட்டுக்கொடிய மரணம் அடைகின்றன.
தான் பிராமணன் என்பதாக உரிமை பாராட்டிக் கொள்ளும் ஒவ்வொருவனும் அவ்வுரிமையை இரண்டு வழிகளில் நிரூபிக்க வேண்டும். முதலாவது தன ஆன்மிக மேன்மையை விளங்க செய்தல்; இரண்டாவது மற்றவர்களைத் தன் நிலைக்கு உயர்த்தல். ஆனால் தற்போது அவர்களின் பலர் பொய்யான பிறவிக் கர்வத்தையே பேணி வருவதாகக் காணப்படுகிறது. பிராமணர்களே ! எச்சரிக்கை ! இது சாவின் அறிகுறி ஆகும்.விழித்தெழுங்கள். உங்களைச் சுற்றியுள்ள பிராமணர் அல்லாதாரை உயர்த்துவதின் மூலம் உங்களுடைய மனிதத் தன்மையையும், பிராமணப் பண்பையும் நிரூபியுங்கள். ஆனால் இதை எஜமானன் என்ற இறுமாப்புடன், குருட்டு நம்பிக்கை கலந்த கர்வத்துடன் செய்ய வேண்டாம். ஊழியன் என்ற தாழ்மை உள்ளதுடன் செய்யுங்கள்.
பிராமணர்களை நான் வேண்டிக் கொள்வதாவது:
‘உங்களுக்குத் தெரிந்திருப்பதை பிறருக்குக் கற்பியுங்கள். பல நூற்றாண்டு காலமாக நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் ஞானச் செல்வத்தை எல்லாருக்கும் அளியுங்கள்.இவ்வாறு இந்திய ஜாதியை உயர்த்த பெருமுயற்சி செய்யுங்கள்’ என்பதே.உண்மை பிராமணம் எது என்பதை நினைவு கூர்ந்திருத்தல் பிராமணர்களின் கடமை ஆகும். பிராமணனிடம் ‘தர்ம பொக்கிஷம்’ இருப்பதினாலேயே அவனுக்கு இவ்வளவு சிறப்புகளும், விசேஷ உரிமைகளும் அளிக்கப்பட்டுள்ளன என்று மனு சொல்கிறார். பிராமணன் அந்தப் பொக்கிஷத்தைத் திறந்து அதிலுள்ள செல்வங்களை உலகிற்கெல்லாம் பகிர்ந்து கொடுக்க வேண்டும்.
பிராமணர் அல்லாதாருகெல்லாம் நான் கூறுவதாவது:
‘பொறுங்கள்; அவசரப்பட வேண்டாம். பிராமணனுடன் சண்டையிட எங்கே சந்தர்ப்பம் என்று காத்திராதிர்கள். நீங்கள் கஷ்டப்படுவதற்குக் காரணம் உங்கள் தவறே ஆகும். ஆன்மிக துறையையும், சமஸ்கிரத கல்வியையும் அலட்சியம் செய்யும் படி உங்களுக்கு யார் சொன்னார்கள்? இவ்வளவு காலம் என்ன செய்து கொண்டிருந்தீரிகள்? இத்தனை நாள் அலட்சியமாக இருந்து விட்டு, இப்போது மற்றவர்கள் உங்களை விட அதிகமூளையும், ஊக்கமும், திறமையும் உள்ளவர்களாக இருப்பது குறித்து எரிச்சலடைவதில் யாது பயன்? பயனற்ற விவாதங்களிலும், பத்திரிகைச் சண்டைகளிலும் உங்கள் சொந்த வீடுகளில் வீணான போர் நடத்திப் பாவம் தேடிக் கொள்வதற்குப் பதிலாக பிராமணன் பெற்றிருக்கும் அறிவுச் செல்வத்தை அடைவதில் உங்கள் எல்லாச் சக்திகளையும் பயன்படுத்துங்கள். வழி அதுவே ஆகும்..
தாழ்ந்த சாதியர்களுக்கெல்லாம் நான் சொல்வதாவது:
‘உங்களுக்கு ஒரே வழி சமஸ்கிருதம் படித்தலே ஆகும். உயர் சாதியார்களிடத்து எரிந்து விழுதலும், அவர்களுடன் சண்டை போடுதலும் பயனளியா. அவ்வழியினால் யாருக்கும் நன்மை இல்லை. அதனால் துரதிர்ஷ்டவசமாக ஏற்கனவே பிரிவினை அதிகமாக உள்ள நமது சமுகத்தில் நாளுக்கு நாள் அதிக வேற்றுமையே ஏற்படும்.உயர் சாதிகளின் வலிமையெல்லாம் அவர்களுடைய கல்வியும், பயிற்சியுமே ஆகும். நீங்களும் அவற்றைக் கைக்கொள்வது என்றே சாதி ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் வழி ஆகும்..
நீங்கள் ஏன் சமஸ்கிரத பண்டிதர்கள் ஆகக்கூடாது? இந்தியாவிலுள்ள எல்லாச் சாதிகளுக்கும் சமஸ்கிரத கல்வி அளிப்பதற்காக நீங்கள் ஏன் கோடிக்கணக்கான பணம் செலவு செய்யலாகாது?
இவைகளை நீங்கள் செய்து முடிக்கும் போது பிராமணனுடன் சமம் ஆகீறிர்கள். இந்தியாவில் செல்வாக்குப் பெறும் இரகசியம் அதுவே ஆகும் இந்தியாவில் சமஸ்கிரதமும் மரியாதையும் பிரிக்க முடியாதவையாக இருக்கின்றன. நீங்கள் சமஸ்கிரத கல்வி பெற்றவுடன் உங்களுக்கு விரோதமாக யாரும் எதுவும் சொல்லத் துணியார்கள்.
—-சுவாமி விவேகானந்தர் ……..