Feeds:
Posts
Comments

Archive for the ‘ஜாதி’ Category

சாதிப் பிரச்சினை

 

சமூகத்திற்கே சாதி —சமயத்திற்கு அன்று..

சமயத்துறையில் சாதி என்பது கிடையாது. சாதி என்பது ஒரு சமுக ஏற்பாடே ஆகும்.மிக உயர்ந்த சாதியைச் சேர்ந்தவனும் மிக தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவனும் இந்த நாட்டில் துறவி ஆகலாம்.அப்போது இரண்டு சாதியும் சமமாகின்றன.

சாதி முதலிய நமது சமூக ஏற்பாடுகள் சமயத் தொடர்புடையனவாக வெளிக்குத் தோன்றினாலும் உண்மையில் அவை அத்தகையனவல்ல. நம்மை ஒரு தனி சமூகமாக காப்பாற்றி வருவதற்கு அந்த ஏற்பாடுகள் அவசியமாக இருந்து வந்திருகின்றன.தற்காப்புக்கு அவசியம் இல்லை என்னும்போது அவை இயற்கை மரணமடைந்து மறையும்.

கௌதம புத்தர் முதல் ராம்மோகன் ராய் வரையிலும் ( சீர்திருத்த்காரர்) எல்லோரும் ஒரு தவறு செய்திருகிறார்கள். அவர்கள் சாதியை சமயப் பிரிவு என்று கொண்டு சாதி, சமயம் எல்லாவற்றையும் சேர்த்து அழித்திவிட முயன்றார்கள். எனவே அவர்கள் அடைந்தது தோல்வியே ஆகும். ப்ரோகிதர்கள் என்ன பிதற்றினாலும் சரியே, சாதி என்பது ஒரு சமூக ஏற்பாடே என்பதில் சந்தேகமில்லை. அந்தப் பிரிவு தன்னுடைய வேலையை செய்த பின்னர் இப்போது அழுகி நாற்றமெடுத்திருக்கிறது. இந்திய ஆகாய வெளியில் அந்த நாற்றம் நிறைந்துள்ளது.

சாதி ஏற்பாடு வேதாந்த மதத்துக்கு விரோதமானது. சாதி என்பது ஒரு வழக்கமேயல்லாது  வேறில்லை.நமது பெரிய ஆசாரியர்கள் எல்லோரும் அதைத் தாக்க முயன்று இருக்கிறார்கள்.புத்தர் காலத்தில் இருந்து சாதிக்கு எதிராக அநேகர் பிரசாரம் செய்து வந்தார்கள். ஆனால் ஒவ்வொரு முறையுலும் அது வலிமை பெற்று வந்ததேயன்றி வேறு பயனில்லை. இந்தியாவின் அரசியல் அமைப்புகளிருந்து வளர்ச்சி பெற்றதே சாதி ஆகும். அதை பரம்பரையான தொழிற் சங்க முறை என்று சொல்லலாம். ஐரோப்பாவுடன் நேர்ந்த தொழிற் போட்டியானது எந்தப் போதனையும் விட சாதியை அதிகம் தகர்த்து இருக்கிறது..

swamiji 037

சாதிப் பிரச்சினையைத் தீர்க்கும் வழி:

சாதி சண்டைகள் போடுவதில் பயனில்லை. அதனால் நன்மை என்ன? அந்தச் சண்டை நம்மை இன்னும் அதிகமாகப் பிரிக்கும்; இன்னும் அதிகமாக பலவீனபடுத்தும்; இன்னும் அதிகமாக தாழ்த்தும்.சாதி பிரச்சினையை தீர்ப்பதற்கு வழி மேலே உள்ளவர்களைக் கீழே இழுப்பதன்று; கீழே உள்ளவர்களை மேலுள்ளவர்களின் நிலைக்கு உயர்த்துவதே ஆகும்.

 நமது லட்சியத்தின் மேல்படியில் பிராமணன், கீழ்ப்படியில் சண்டாளன். சண்டளானை பிராமண நிலைக்கு உயர்த்துவதே நமது வேலை. உயர் வகுப்பாரின் கடமை தங்களுடைய வீசேஷ உரிமைகளைத் தாங்களே தியாகம் செய்வதாகும். இது எவ்வளவு விரைவில் நடக்கிறதோ அவ்வளவுக்கு நன்மை. தாமதம் ஆக ஆக அவை அதிகமாக கெட்டுக்கொடிய மரணம் அடைகின்றன.

 தான் பிராமணன் என்பதாக உரிமை பாராட்டிக் கொள்ளும் ஒவ்வொருவனும் அவ்வுரிமையை இரண்டு வழிகளில் நிரூபிக்க வேண்டும். முதலாவது தன ஆன்மிக மேன்மையை விளங்க செய்தல்; இரண்டாவது மற்றவர்களைத் தன் நிலைக்கு உயர்த்தல். ஆனால் தற்போது அவர்களின் பலர் பொய்யான பிறவிக் கர்வத்தையே பேணி வருவதாகக் காணப்படுகிறது. பிராமணர்களே ! எச்சரிக்கை ! இது சாவின் அறிகுறி ஆகும்.விழித்தெழுங்கள். உங்களைச் சுற்றியுள்ள பிராமணர் அல்லாதாரை உயர்த்துவதின் மூலம் உங்களுடைய மனிதத் தன்மையையும், பிராமணப் பண்பையும் நிரூபியுங்கள். ஆனால் இதை எஜமானன் என்ற இறுமாப்புடன், குருட்டு நம்பிக்கை கலந்த கர்வத்துடன் செய்ய வேண்டாம். ஊழியன் என்ற தாழ்மை உள்ளதுடன் செய்யுங்கள்.

 பிராமணர்களை நான் வேண்டிக் கொள்வதாவது:

‘உங்களுக்குத் தெரிந்திருப்பதை பிறருக்குக் கற்பியுங்கள். பல நூற்றாண்டு காலமாக நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் ஞானச் செல்வத்தை எல்லாருக்கும் அளியுங்கள்.இவ்வாறு இந்திய ஜாதியை உயர்த்த பெருமுயற்சி செய்யுங்கள்’ என்பதே.உண்மை பிராமணம் எது என்பதை நினைவு கூர்ந்திருத்தல் பிராமணர்களின் கடமை ஆகும். பிராமணனிடம் ‘தர்ம பொக்கிஷம்’ இருப்பதினாலேயே அவனுக்கு இவ்வளவு சிறப்புகளும், விசேஷ உரிமைகளும் அளிக்கப்பட்டுள்ளன என்று மனு சொல்கிறார். பிராமணன் அந்தப் பொக்கிஷத்தைத் திறந்து அதிலுள்ள செல்வங்களை உலகிற்கெல்லாம் பகிர்ந்து கொடுக்க வேண்டும்.

 பிராமணர் அல்லாதாருகெல்லாம் நான் கூறுவதாவது:

‘பொறுங்கள்; அவசரப்பட வேண்டாம். பிராமணனுடன் சண்டையிட எங்கே சந்தர்ப்பம் என்று காத்திராதிர்கள். நீங்கள் கஷ்டப்படுவதற்குக் காரணம் உங்கள் தவறே ஆகும். ஆன்மிக துறையையும், சமஸ்கிரத கல்வியையும் அலட்சியம் செய்யும் படி உங்களுக்கு யார் சொன்னார்கள்? இவ்வளவு காலம் என்ன செய்து கொண்டிருந்தீரிகள்? இத்தனை நாள் அலட்சியமாக இருந்து விட்டு, இப்போது மற்றவர்கள் உங்களை விட அதிகமூளையும், ஊக்கமும், திறமையும் உள்ளவர்களாக இருப்பது குறித்து எரிச்சலடைவதில் யாது பயன்? பயனற்ற விவாதங்களிலும், பத்திரிகைச் சண்டைகளிலும் உங்கள் சொந்த வீடுகளில் வீணான போர் நடத்திப் பாவம் தேடிக் கொள்வதற்குப் பதிலாக பிராமணன் பெற்றிருக்கும் அறிவுச் செல்வத்தை அடைவதில் உங்கள் எல்லாச் சக்திகளையும் பயன்படுத்துங்கள். வழி அதுவே ஆகும்..

 தாழ்ந்த சாதியர்களுக்கெல்லாம் நான் சொல்வதாவது:

‘உங்களுக்கு ஒரே வழி சமஸ்கிருதம் படித்தலே ஆகும். உயர் சாதியார்களிடத்து எரிந்து விழுதலும், அவர்களுடன் சண்டை போடுதலும் பயனளியா. அவ்வழியினால் யாருக்கும் நன்மை இல்லை. அதனால் துரதிர்ஷ்டவசமாக ஏற்கனவே பிரிவினை அதிகமாக உள்ள நமது சமுகத்தில் நாளுக்கு நாள் அதிக வேற்றுமையே ஏற்படும்.உயர் சாதிகளின் வலிமையெல்லாம் அவர்களுடைய கல்வியும், பயிற்சியுமே ஆகும். நீங்களும் அவற்றைக் கைக்கொள்வது என்றே சாதி ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் வழி ஆகும்..

 நீங்கள் ஏன் சமஸ்கிரத பண்டிதர்கள் ஆகக்கூடாது? இந்தியாவிலுள்ள எல்லாச் சாதிகளுக்கும் சமஸ்கிரத கல்வி அளிப்பதற்காக நீங்கள் ஏன் கோடிக்கணக்கான பணம் செலவு செய்யலாகாது?

இவைகளை நீங்கள் செய்து முடிக்கும் போது பிராமணனுடன் சமம் ஆகீறிர்கள். இந்தியாவில் செல்வாக்குப் பெறும் இரகசியம் அதுவே ஆகும் இந்தியாவில் சமஸ்கிரதமும் மரியாதையும் பிரிக்க முடியாதவையாக இருக்கின்றன. நீங்கள் சமஸ்கிரத கல்வி பெற்றவுடன் உங்களுக்கு விரோதமாக யாரும் எதுவும் சொல்லத் துணியார்கள்.

—-சுவாமி விவேகானந்தர் ……..

Read Full Post »

சாதி ஏற்பாட்டின் உட்கருத்து…

ஐரோப்பிய நாகரிகத்திற்குரிய வழிமுறை பலத்காரம் ஆகும். ஆரிய நாகரிகமோ வர்ண தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த வர்ணப் பிரிவினை நாகரிகம் என்னும் உச்சிக்கு மக்களை அழைத்துச் செல்லும் படிக்கட்டாகும். ஒருவனுடைய கல்வியும், அறிவு பயற்சியும் அதிகமாக ஆக அவன் அந்தப் படிக்கட்டின் மூலமாக மேலே மேலே ஏறிக்கொண்டிருக்கிறான்.ஐரோப்பிய நாகரிகத்தில் பலசாலிகளுக்கே வெற்றி; பலவீனர்கள் அழிந்து போக வேண்டியது தான். ஆனால் பாரத நாட்டிலோ ஒவ்வொரு சமூக விதியும் பலவீனர்களைப் பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்டதாகும்.

 சாதி என்பது நல்ல ஏற்பாடுகள். ஆனால் உண்மையில் சாதி என்றால் என்ன என்று லட்சத்தில் ஒருவர் கூட அறிந்து கொள்வதில்லை. உலகில் சாதி இல்லாத நாடே இல்லை. இந்தியாவில் நாம் சாதி என்னும் கிழ்ப்படியில் தொடங்கி சாதியற்ற மேல் நிலையை அடைகிறோம். சாதி என்பது இந்த தத்துவத்தை அடிப்படையாக கொண்டது ஆகும். இந்தியாவில், பிராமணன் மனித குலத்தின் இலக்கியமாவான்.ஒவ்வொருவனையும் பிராமணன் ஆக்குவது சாதி ஏற்பாட்டின் நோக்கமாகும். இந்திய வரலாற்றை படித்தால் கீழ் வகுப்பாரை மேலே கொண்டுவர எப்போதும் முயற்சிகள் செய்யப்பட்டு வந்திருப்பதை காண்பீர்கள். பல வகுப்புகள் கைதூக்கி விடப்ப்படிருகின்றன. மற்றும் பல வகுப்புகளும் மேலே வந்து முடிவில் எல்லோரும் பிராமணர்கள் ஆவார்கள். இதுவே சாதி ஏற்பாட்டின் நோக்கமாகும். யாரையும் கீழே கொண்டுவரமால் எல்லோரையும் மேலே தூக்கிவிட வேண்டும். இதைப் பெரிதும் பிராமணர்களே செய்தாக வேண்டும். எல்லா உரிமை பெற்ற கூட்டங்களும் தங்களுக்குத் தாங்களே குழி வெட்டிக் கொள்கிறார்கள். ஆகையால் மற்றவர்களையும் தங்களுக்குச் சமமாக உயர்த்தலே அவர்கள் கடமை ஆகும்.

sv16[1]

சாதி நல்லது; உரிமைதான் தீயது.

 சாதி என்பது நல்ல ஏற்பாடே. சமூக வாழ்க்கையை ஒழுங்கப்படுத்துவதற்கு அது ஒன்றே இயற்கை வழி. எந்த சமூகத்திலும் மனிதர்கள் தனித்தனிக் குழுவாகச் சேர்ந்தே ஆகவேண்டும். இந்த இயற்கை நியதியை மாற்ற முடியாது. நீங்கள் எங்கே போனாலும் சாதி இருப்பதைக் காணலாம்.சாதி அடியோடு போகவேண்டியது இல்லை. அதை அடிக்கடி சீர்திருத்தி அமைத்தலே அவசியம் ஆகும்.சாதியை அடியோடு ஒழிக்க விரும்புதல் அறிவீனமாகும்.

 நம்மை ஒரு தனிச்சமூகமாகக் காப்ற்றுவதற்கு இந்த ஏற்பாடுகள் அவசியமாக இருந்திருக்கின்றன. தற்காப்புக்கு இந்த அவசியம் இல்லாமல் போகும் போது அவை இயற்கை மரணம் அடையும். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள சாதி ஏற்பாட்டைக் காட்டிலும் இந்திய சாதி ஏற்பாடு சிறந்ததாகும். அது முற்றிலும் நல்லது என்று நான் சொல்லவில்லை. சாதி இல்லாவிட்டால் இப்போது உங்கள் கதி என்னவாக இருக்கும்? உங்கள் கல்வியும், பிறவும் என்ன கதி அடைந்திருக்கும்?

 தனி வகுப்புகளாகப் பிரிந்தமைதல் சமூகத்தின் இயற்கை. விசேஷ உரிமைகளே தொலைதல் வேண்டும்.சாதி என்பது ஓர் இயற்கை நியதி. சமூக வாழ்வில் நான் ஒரு கடமையை செய்கிறேன்; நீ மற்றொரு கடமையை செய்கிறாய். நீ நாட்டை ஆள்கிறாய்; நான் பழைய செருப்பு தைக்கிறேன். இதனாலேயே நீ என்னைவிட பெரியவனாவது எவ்வாறு? நான் நாடாள முடியாதெனில் நீ செருப்பு தைக்க முடியுமா? நான் செருப்பு தைப்பதில்  திறமையானவன்; நீ வேதம் ஓதுவதில் திறமையானவன்; அதனால் நீ என் தலை மீதேறி மிதிக்க வேண்டும் என்பது என்ன?

ஆண்டவன் மனித குலத்திற்கு அளித்த மிகச் சிறந்த சமூக அமைப்புகளில் சாதி ஏற்பாடு ஒன்று என்பதாக நாங்கள் நம்புகிறோம். விலக்க முடியாத பல குறைபாடுகளும், அந்நிய நாட்டவரின் கொடுமைகளும் எல்லாவற்றிற்கும் மேலாக பிராமணர் என்னும் பெயருக்கு தகுதியற்ற பிராமணர் பலரின் மகத்தான அஞ்ஞானமும் கர்வமும், அந்த உரிய அமைப்பானது உரிய பயனனியா வண்ணம் செய்திருக்கின்றன. அவ்வாறு இருப்பினும், அந்த அமைப்பினால் பாரத நாட்டுக்கு ஆச்சரியகரமான நன்மைகள் விளைதிருகின்றன என்றும், இனியும் இந்திய சமூகத்தை அதன் இலட்சியத்துக்கு கொண்டு சேர்க்க போவது அந்த அமைப்பே என்று நாங்கள் நம்புகிறோம்..

 தற்கால சாதி வேற்றுமையானது இந்தியாவின் முன்னேற்றத்துக்கு ஒரு தடைக்கல்லாகும். அது வாழ்வை குறுக்குகின்றது; கட்டுப்படுத்துக்கின்றது; பிரிவினை செய்கின்றது. அறிவு வெள்ளத்தின் முன்பாக அது விழுந்து மாயும்.

 தற்போதைய  அரசாங்கத்தின்கீழ், எவனும் தன் வாழ்விற்காக எந்த தொழிலும் செய்யலாம். தடை எதுவும் கிடையாது. எனவே வாழ்க்கை போட்டி வலிமையாகிவிட்டது. இதன் பயனாக ஆயிரக்கணக்கானவர்கள் அடியில் கிடந்து உழலாமால், தங்கள் ஆற்றல்கள் அனைத்தையும் பயன்படுத்தி மேல் நிலைக்கு வந்திருக்கிறார்கள்.

 –சுவாமி விவேகானந்தர் …..

Read Full Post »