கடவுள் நமக்குத் தேவையா?
பாகம் 3 இன் தொடர்ச்சி:
கடவுள் உண்டு என்றோ இல்லை என்றோ நூல்களை எழுதுவதால் என்ன பயன்? கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றி பெரும்பாலோர் கவலைப் படுவதே இல்லையே.
இங்குள்ள மக்களுள் பெரும்பாலோர் காலையில் எழுந்ததும் சிற்றுண்டி அருந்தச் செல்கின்றனர். அதை உண்ணவோ, உடை அணிந்துகொள்ளவோ கடவுள் வந்து உதவி செய்வதில்லை. பின்னர் வேலைக்குச் சென்று நாள்முழுவதும் உழைத்துப் பணம் சம்பாதிக்கிறான். இரவில் சாப்பிடுகிறான். பிறகு உறங்கச் செல்கிறான். கடவுளைப் பற்றியே சிந்திக்காமல் ஒரு எந்திரம்போல் செயல்படுகிறான். அப்படி ஒருவர் தேவை என்றும் அவன் உணர்வதில்லை. பின்பு ஒரு நாள் மரணம், ‘வா’ என்று அழைக்கின்றது. அப்போது, ‘சிறிது காத்திரு. எனக்கு இன்னும் சிறிது காலம் தேவை; என் மகன் இன்னும் சற்று பெரியவனாகட்டும்’ என்கிறான். ஆனால் மரணமோ, ‘உடனே வா’ என்று கூவுகிறது. இப்படியே எல்லோம் போய்க் கொண்டிருகின்றன. பாவம், மனிதனும் இப்படியே வாழ்கிறான் அவனுக்கு நாம் என்ன சொல்ல முடியும்? இறைவனே அனைத்திலும் மிக மேலானவன் என்று அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒருவேளை அவன் முற்பிறவியில் ஒரு பன்றியாக இருந்து இப்போது சற்று உயர்ந்து மனிதனாகப் பிறந்திருக்ககூடும்.
ஆனால் இத்தகையோர் மட்டுமே உலகில் இருகிறார்கள என்றில்லை. சிறிது விழிப்புணர்வு பெற்ற சிலரும் இருக்கவே செய்கிறார்கள். துன்பம் வருகிறது, நாம் மிகவும் நேசிக்கின்ற ஒருவர் இறக்கிறார்; எதைப் பெறுவதற்காக நம் ஆற்றல் அனைத்தையும் செலவிட்டோமோ, எதற்காக உலகனைத்தையும் வஞ்சித்தோமோ உலகனைத்தையும் என்றல்ல, சொந்த சகோதரனைக்கூட வஞ்சிக்கத் துணிந்தோமோ, எத்தனையோ கொடிய இன்னல்களையும் அவருக்கு இழைக்கத் துணிந்தோமோ அது திடிரென்று மறைந்துவிடுகிறது; நம்மீது பேரிடிவிழந்தது போலாகிறது. அப்போது நம் இதய ஆழத்திலிருந்து ஒரு குரல் எழுகிறது; ‘இதற்கு பின் என்ன?’ என்று அது கேட்கிறது. எந்த மகனுக்காகத் தானும் பட்டினி கிடந்து, பிறரையும் ஏமாற்றி வந்தானோ, அந்த மகன் ஒருவேளை இறந்துவிடுகிறான். அந்தப் பேரிடியால் அவன் விழிப்புணர்வு பெறுகிறான். எந்த மனைவியை அடைய அவன் வெறிபிடித்த காளையைப் போல் எல்லோரிடமும் முட்டிமோதிப் போனானோ, யாருக்காகப் புது ஆடைகளும், நகைகளும் வாங்கப் பணம் சேர்த்து வைத்தானோ, அவள் ஒருநாள் திடிரென்று இறந்து போகிறாள். பிறகு என்ன? சில வேளைகளில் மரணம் வருகிறது. அது எவ்வித அதிர்ச்சியையும் தராமலே போகிறது. ஆனால் மிகவும் அரிதாகவே அவ்வாறு நிகழ்கிறது.
நம் பொருள் கைவிட்டு நழுவும்போது, நம்முள் பெரும்பாலோர், ‘இனி என்ன?’ என்று பதறி ஓலமிடுகிறோம். நாம் புலன்களை எப்படி பற்றிக்கொள்கிறோம்! இதனால்தான் துன்பபடுகிறோம். ஆற்றில் முழ்கும் ஒருவன், பிடித்துக்கொள்ள வேறு ஒன்றும் கிடைக்காதபோது ஒரு துரும்பைப் பற்றிக்கொண்டு தன்னைக் காப்பற்றிக் கொள்ள முயல்கிறான். சாதாரணமாக மனிதனும் இவ்வாறே தனுக்கு எதிரில் முதலில் எது கிடைக்கிறதோ அதைப் பற்றிக்கொள்கிறான். அது காப்பற்றாதபோது யாரவது தனக்கு உதவி புரிய வேண்டுமென கெஞ்சுகிறான். எவ்வளவோ கஷ்டங்களை அனுபவித்த பிறகுதான் உயர் விஷயங்களைப்பற்றி நினைக்கிறான். இந்த பக்திதான் ஆன்மிகம்.
ஆனால் இது பெரும்பான்மையோருக்கு உரியது அல்ல. அது முடியாத காரியம். முழுங்காலிடுவதும் எழுவதும் அமர்வதும் பெரும்பாலோருக்கு தக்கனவாக இருக்கலாம். ஆனால் ஆன்மிகம் என்பது ஒரு சிலருக்கே. ஒவ்வொரு நாட்டிலும் எதோ ஒருசிலரே ஆன்மிகவாதிகளாக இருக்க முடியும். பிறரால் முடியாது. அவர்கள விழிப்புணர்வு பெறாதவர்களாக இருப்பது தான் அதற்கு காரணம். அதை அவர்கள் விரும்பவதும் இல்லை. முதலில் தேவையானது இறைநாட்டம். ஆனால் பொதுவாக நாம் கடவுளை தவிர மற்ற எல்லாவற்றையும் நாடுகிறோம். ஏனெனில் நமது சாதாரண தேவைகளைப் புற உலகம்தான் நமக்குத் தந்துகொண்டிருகிறது. நமது தேவைகள் புற உலகைத் தாண்டி செல்லும்போது தான் உள்ளேயிருந்து, அதாவது இறைவனிடமிருந்து நாம் உதவியை எதிர்ப்பார்க்கிறோம். நமது தேவைகள் இந்த பிரபஞ்சத்தின் குறுகிய வட்டத்திற்குள் இருக்கும்வரையில் கடவுளின் தேவை நமக்கு இருப்பதில்லை. இந்த உலகில் உள்ளவற்றை அனுபவித்து சலிப்படைந்த பிறகுதான், இதனை கடந்த ஒன்றின் உதவியை எதிர்பார்க்கிறோம். தேவை இருந்தால்தான் உதவி கிடைக்கும். இந்த உலகமாகிய குழந்தை-விளையாட்டை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக முடித்துவிடு. அதன் பிறகுதான் இதற்கு அப்பால் இருக்கின்ற ஒன்றின் தேவை உனக்கு ஏற்படும்.அதுதான் ஆன்மிகத்தின் முதற்படி.
வெறும் நாகரிகமான ஒருவகை மதம் தோன்றியுள்ளது. என் நண்பரின் விருந்தினர் அறையில் மற்ற பொருட்களுடன் ஜப்பானிய ஜாடி ஒன்றும் உள்ளது. அது நாகரிகமாக இருப்பதால் பல ஆயிரம் டாலர்கள் மதிப்புள்ளதாக இருந்தாலும், நானும் அதுபோல் ஒன்று வாங்கியாக வேண்டும். அவ்வாறே நாகரிகத்திற்காக மதத்தைப் பின்பற்றிக் கோவிலுக்கு செல்கிறேன். பக்தி இத்தகையோருக்கானது அல்ல. உண்மையான ‘தேவை’யிலிருந்துதான் பக்தி பிறக்கிறது. எது இல்லாமால் நாம் உயிர் வாழ முடியாதோ, அதுதான் ‘தேவை’. மூச்சு தேவை, உணவு தேவை, உடை தேவை. இவை இல்லாமல் உயிர்வாழ முடியாது. ஒருவன் ஒரு பெண்ணைக் காதலிக்கும்போது கூட அவள் இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்று சிலவேளைகளில் நினைக்கிறான்—அது தவறு. கணவன் இறந்துவிட்டால், அவனில்லாமல் தான் வாழ இயலாது என்று மனைவி கருதுகிறாள்; ஆனால் அவள் வாழ்வே செய்கிறாள். இதுதான் ‘தேவை’ என்பதன் ரகசியம்; அது இல்லாமல் நாம் வாழ முடியாது, அது நம்குக் கிடைக்க வேண்டும், அல்லது நாம் இறந்துவிடுவோம்.
உரிய கால வரும்போது கடவுளைப் பற்றியும் நாம் இப்படி நினைக்கிறோம். அதாவது இந்த உலகிற்கு அப்பாற்ப்பட்ட ஒன்றை, ஜட சக்திகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றின் தேவையை நாம் உணர்கிறோம். அப்போதுதான் நாம் பக்தர்கள் ஆகிறோம். ஒரு நொடிப் பொழுதாயினும் சரி, மேகங்கள் மறைந்து பரம்பொருளைப் பற்றிய காட்சி கிடைக்கும்போது, அற்ப இன்பங்களெல்லாம் கடலின் சிறு துளியாக தோன்றும்போது, ‘என்ன இந்த அற்ப வாழ்க்கை !’ என்ற எண்ணம் பிறக்கிறது. அப்போதுதான் ஆன்மா வளர்கிறது; கடவுளின் தேவையை உணர்கிறது; அவனை அடைந்தே தீர வேண்டும் என்று துடிக்கிறது.
எனவே ‘நமக்கு வேண்டியது என்ன? எனபதே முதற்படி. இறைவன் நமக்கு வேண்டுமா ?’ இந்தக் கேள்வியை தினமும் நமக்கு நாமே கேட்டுக் கொள்வோம். பிரபஞ்சத்திலுள்ள எல்லா நூல்களையும் நாம் படிக்கலாம். ஆனால் பேச்சுத் திறமையினலோ, மதி நுட்பத்தினலோ, பற்பல கலைகளைக் கற்பதலோ இந்த அன்பு மலர்வதில்லை. இறைவனின் தேவையை உணர்பவர்களுக்கே இந்த அன்பு கிடைக்கும். இறைவன் அவர்களுக்கே காட்சி அளிக்கிறான்.
—சுவாமி விவேகானந்தர்….
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் வரும் …..
Read Full Post »