Feeds:
Posts
Comments

Posts Tagged ‘இந்தியா’

12189183_1025915864132622_9057793412933950991_n

காலத்தால் அழியா சுவடுகள்:- 7

ஜூன் 20, 1909.

லண்டனிலுள்ள இந்தியா ஹவுஸில் ஒரு திட்டம் ஒன்று உருவாகிக் கொண்டிருந்தது. இந்திய தேச விடுதலைக்காக ஒரு புரட்சி வீரன் அன்று ஒரு முக்கிய பணியை முன்னிட்டு வீர் சாவர்க்கருடன் சில முடிவுகளை எடுத்துக் கொண்டிருந்தான். புரட்சி வீரன் அமைதியாக திட்டத்தை விவரித்துக் கொண்டிருந்தான். சாவர்க்காரின் சம்மதத்தைப் பெற்றான். இறுதியில் ஜூலை ஒன்றாம் நாள் அந்தப் திட்டத்திற்கு நாள் குறிக்கப்பட்டது. திட்டத்தின் படி அந்த புரட்சி வீரன் ஒரு ஆங்கிலேயரை கொலை செய்யும் கடமையை ஏற்றுக் கொண்டான்

இதன் பின்புலம் என்ன?

”இண்டியா ஹவுஸ்” என்பது வீர் சாவர்க்கரால் தேச பக்தியை ஒருங்கிணைப்பதற்கும், பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து போராடுவதற்க்காகவும் லண்டனில் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. இதில் அனேகமாக லண்டனுக்கு பல்வேறு துறைகளில் கல்வி பயில வந்த தேச பக்தி மிகுந்த மாணவர்கள் உறுப்பினர்களாக இருந்து வந்தார்கள். இதனால் இண்டியா ஹவுஸ் பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு ஒரு பெரிய அறைகூவலாகவே இருந்து வந்தது.

பிரிட்டிஷ் அரசும் தன் பங்குக்கு ஒரு அமைப்பை போற்றி வளர்த்து வந்தது. அது தேசிய இந்திய கூட்டமைப்பு என்ற பெயரில் லண்டனில் இயங்கி வந்தது. இதன் முக்கிய நோக்கங்களுள் ஒன்று லண்டனுக்கு கல்வி கற்க சென்ற இளைஞர்கள் இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபடுவார்களேயானால் மூளை சலவை செய்து அவர்களை தேசபக்தியற்றவர்களாக செய்வதாகும். அதன் செயலாளர் எம்மா ஜோசஃபின் என்னும் அம்மையார். பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தக் அமைப்பின் அங்கத்தினர்களை மூளை சலவை செய்வதற்க்காக மூவர் அடங்கிய ஒரு கமிட்டியை உருவாக்கியிருந்தது. அந்தக் கமிட்டியின் முக்கிய உறுப்பினர் சர் வில்லியம் கர்ஸன் வைலி. கர்ஸன் வைலியின் தந்திரத்தினால் பல இந்திய இளைஞர்கள் இதயத்தில் குடியிருந்த இந்திய விடுதலை போராட்டம் என்ற மாயை விலகி தேசபக்தியை கைவிட்டனர். இதனால் கொதிப்படைந்தது ”இண்டியா ஹவுஸ்”.

அன்று அந்தத் திட்டம் வகுக்கப்பட்டதன காரணம் இதுவே. புரட்சி வீரன் எம்மா அம்மையாரை நட்பு செய்து கொண்டான். பின்னர் அவருடைய அமைப்பில் முழு உறுப்பினரானான். பின்னர் ஜூலை 1, 1909ல் தேசிய இந்திய கூட்டமைப்பு வருடாந்திர தினத்தை கொண்டாடுவதற்க்காக இம்பீரியல் இன்ஸ்டிடுயூட் ஜெஹங்கீர் ஹாலிற்கு வந்த கர்ஸன் வைலியை சுட்டுக் கொன்றான்.

விரைவில் அவனுக்கு தூக்கு தண்டனை வழங்கியது பிரிட்டிஷ் அரசு. அவனும் அதையே விரும்பினான். காரணம், அப்பொழுதுதான் மேலும் பல இந்திய இளைஞர்கள் கொதிப்படைந்து தேச விடுதலைக்குப் போராட முன் வருவார்கள் என்பதே. அந்த புரட்சி வீரன் மதன்லால் திங்க்ரா.

நீதிமன்றத்தில் திங்க்ரா சொன்னான், ” என் தாய்நாட்டுக்காக நான் உயிரிழக்க போகிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன். நினைவில் கொள்ளுங்கள். எங்கள் காலம் விரைவில் வரும். என்னை காத்துக்கொள்ள நான் சொல்ல எதுவுமில்லை. எந்த ஆங்கிலேய நீதிமன்றத்திற்கும் என்னை கைது செய்யவோ, தண்டிக்கவோ அதிகாரமில்லை. அதனால்தான் வாதாட வக்கீல் வைக்கவில்லை.

ஜெர்மானியர்களை எதிர்த்து போராட உங்களுக்கு உரிமை உள்ளதென்றால் அதே உரிமை என்னாட்டுக்காக போராட எனக்கும் மிக அதிகமாகவே உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் எங்கள் மக்கள் 8 கோடி பேரை கொன்றதற்கும், ஆண்டுதோறும் 100,000,000 பவுண்டு நிகரான செல்வங்களை எங்கள் நாட்டிலிருந்து கொல்லை அடித்து செல்லும் உங்களை கொல்லும் கடமை எனக்கு இருக்கிறது.

எங்கள் தேசபக்தர்களை கொல்கிறீர்கள், ஒரு ஆங்கிலேயன் வாழ எங்கள் மக்கள் 3000 பேர் இரத்தம் சிந்த உழைக்க வேண்டியிருக்கிறது. உங்கள் எதிரியான ஜெர்மானியர்களை கொல்லும் ஆங்கிலேயன் வீரன் என்றால், எங்கள் எதிரியான உங்களை கொல்லும் நான் மட்டும் எப்படி குற்றவாளியாவேன் என்றான்.

Read Full Post »

12187685_1025411007516441_6111743954458650091_n

காலத்தால் அழியா சுவடுகள்:- 6

வந்தே மாதரம் (தாய் மண்ணே வணக்கம்) பாடல், பக்கிம் சந்திர சட்டர்ஜியினால் 1882-ல் “ஆனந்த மடம் “ நாவலில் எழுதப்பட்டது என்பது எல்லோரும் அறிந்த விஷயம். ஆனால் அத்தகைய தாராக மந்திரத்திற்கு பின்னனியில் நடந்தது என்ன ?

வங்காளத்தில் ஒரு மாவட்ட துணை ஆட்சியாளராகப் பணியில் இருந்த பக்கிம் சந்திர சட்டர்ஜி, தட்சிணேசுவரம் சென்று ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சியரிடம் ஆசி பெற்றார்.

சட்டர்ஜிக்கு ஆசி வழங்கிய பரமஹம்சர், ‘உனது பெயர் என்ன?’ என்று கேட்டார். ‘என் பெயர் பக்கிம் சந்திரர் ‘ என்று பதிளிலத்தார்.

வங்காள மொழியில் பக்கிம் என்றால் ‘வளைந்த’ என்று பொருள். வளைந்த சந்திரன். அதாவது ‘பிறைச் சந்திரன்’ என்று அர்த்தம்.

இதை கேட்ட பரமஹம்சர் சிரித்தபடி ” நீ…. வளைந்த சந்திரனா! ஆங்கிலேய அரசில் பணிபுரிபவன் தானே நீ! ஆங்கிலேயன் பூட்ஸ் காலால் மிதித்ததில் வளைந்து போய்விட்டாயா!” என்று கேட்டார்.

பரமஹம்சரின் வார்த்தைக் கேட்ட பக்கிம் சந்திரர் குறுகிப் போனார்; வருந்தினார். நேராக தம் வீடு வந்தவர், அந்நியரிடம் பணியாற்றுவது தமக்கு அவமானம் என உணர்ந்தார். உடனடியாகத் தமது துணை ஆட்சியாளர் பதிவியை ராஜினாமா செய்தார். பின்னர் தேச விடுதலைக்குப் பாடுபட்டார்.

அப்போது அவர் எழுதிய நூல்தான்’ஆனந்தமடம்’. அந்த நூலில்தான் ‘வந்தேமாதரம்’ பாடல் இடம் பெற்றுள்ள்ளது.

விடுதலை பெருநெருப்பை மூட்டிய வந்தேமாதரத்திற்கு முதல் பொறி கொடுத்தவர் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்.

Read Full Post »

12107953_1024411640949711_8074768904993930253_n

காலத்தால் அழியா சுவடுகள்:- 5

வந்தேமாதரம்..

நமது நாட்டின் தாரம மந்திரம் வந்தேமாதரம்! பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய ‘ஆனந்தமடம்’ எனும் நாவலில் வந்தேமாதரம் இடம் பெறுகிறது. வந்தேமாதரம் என்றால் என் தாய்திருநாட்டை வணங்குகிறேன் என்று பொருளாகும். பாரத நாட்டை பாரத மாதாவாக, சரஸ்வதியாக, துர்க்கையாக, லட்சிமியாக வர்ணித்து பாடுகிறார்.

’தாயே! பாரதமாதா! நான் எந்தக் கோயிலுக்குச் சென்று வணங்கினாலும் அங்கே உன் எழில் வடிவத்தினையே காண்கிறேன்’ என்று பாடுகிறார். இந்தப் பாடலில் இருந்துதான் வந்தேமாதரம் என்ற சொல் உணர்ச்சிப் பிழம்பான கோஷமாக பிறந்தது. வந்தேமாதரம் என்ற கோஷத்திற்கு எவ்வளவு சக்தி இருந்தது என்பதனை, சுதந்திரப் போராட்ட வீரர் ம.பொ. சிவஞானம் மிக அருமையாக விளக்குகிறார்.

சுதந்திரப் போராட்டத்தில் போலீசார் தடியால் தாக்கும்போது ஒன்றிரண்டு அடிகளுக்கு மேல் தாங்கமுடியாத ஒருவர், அடிக்கு அடி வந்தேமாதரம் சொல்லும்போது அவரது உடலில் பத்துக்கு மேற்பட்ட அடிகளைத் தாங்கக் கூடிய சக்தி வந்துவிடும்’ என்பார். வந்தேமாதரம்! என்ற கோஷம், சுதந்திரப் போராட்ட வீரர்களிடையே மெய்சிலிர்ப்பையும் ஆவேசத்தையும் உருவாக்கியது. இளைஞர்கள் புன்முறுவலுடன் தூக்குக் கயிற்றை முத்தமிடவும் வெஞ்சிறையில் வாடவும் தைரியத்தைக் கொடுத்தது.

விண்ணைப் பிளந்தது வந்தேமாதரம்…

ஆயிரக்கணக்கான தேசபக்தர்களின் வீர முழக்கம் கேட்டு ஆவேசமடைந்தனர் ஆங்கிலேய அதிகாரிகள். “அடக்குங்கள் ஒடுக்குங்கள்” என்ற அவர்களின் உத்தரவையடுத்து போலீசார் ஆவேசத்துடன் கண்மூடித்தனமாக தேசபக்தர்களைத் தாக்கத் தொடங்கினர். எங்கு பார்த்தாலும் தலை உடைந்தும் விலா எலும்புகள் நொறுக்கப்பட்டும் கைகள் முறிக்கப்பட்டும் ரத்தம் சொட்ட சொட்ட மக்கள் காணப்பட்டனர். ஆனாலும் ஒவ்வொரு தடியடித் தாக்குதலுக்கும், எதிர்த்தாக்குதலாக அவர்களின் வந்தே மாதரம் இடி முழக்கமாக முழங்கிக் கொண்டிருந்தது. தேச பக்தர்களின் ஆவேசத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினார்கள். வந்தே மாதரம் என்ற போர் முழக்கம் அந்த பகுதியையே எதிரொலித்துக் கொண்டிருந்தது.

வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
போலீசாரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை எதிர் கொண்ட அந்தக் கூட்டம் நொடிப்பொழுதில் தேசபக்தியின் உணர்வுகளை ஒருமுகமாக வந்தே மாதரம் என்ற மந்திரம் மூலமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. தேசபக்தர்கள் அடிக்கப்பட்டார்கள், உதைக்கப்பட்டார்கள், இருந்த போதும் கூட்டம் கட்டுக்கோப்பாக தங்களது உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தது. தாக்குதலில் சாலையோர சாக்கடையில் விழுந்தவர்கள் தங்கள் வலியையும் பொருட்படுத்தாது மீண்டும் போராட்டக் களத்தில் எழுந்து வந்து நின்றனர். உள்ளத்தின் அடிப்பாகத்திலிருந்து சொல்லி வைத்தார் போல் ஒரே குரலில் அனைவரும் வந்தே மாதரம் வந்தே மாதரம் என்று முழங்கிய கர்ஜனை விண்னைப் பிளந்தது. வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! பல ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்த அவர்களின் சுதந்திர தாகம் சூறாவளி காற்றாக என கரையை புரட்டிக் கொண்டிருந்தது.

மேற்குவங்கத்தின் பாரிசால் வீதிகளில் எழுந்த இந்த சுதந்திர போர் முழக்கம், பாரத தேசத்தின் மூலை முடுக்கெல்லாம் உள்ள ஒவ்வொரு இந்தியனின் உணர்வுகளை தட்டி எழுப்பியது. பாரிசால் வீதிகளில் முழங்கப்பட்ட வந்தே மாதரம் தேசமெங்கும் எதிரொலித்தது. நாடெங்கும் வந்தே மாதரம் வந்தே மாதரம் கோஷங்கள் விண்ணைப் பிளந்தது. வந்தே மாதரம் என்ற இடிமுழக்கம் கேட்டு ஆங்கில அரசு நிலை குலைந்தது. இந்த கோஷங்கள் அவர்களுக்கு பல விதமான அச்சங்களை தந்தது. ஆங்கில அரசு செய்வதறியாமல் திகைத்தது. அவர்கள் காதுகளில் திரும்ப திரும்ப எதிரொலித்துக் கொண்டே இருந்தது…………… வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

வந்தேமாதரம் அன்று மட்டும் அல்ல, இன்றும் ஒவ்வொருவரின் நாடி நரம்புக்களை தட்டி எழுப்பும் விதமாக அமைந்துள்ளது.

”வந்தே மாதரம் என்போம்– எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம்”

–பாரதி…

Read Full Post »

12189743_1023169424407266_7972276975650302072_n

காலத்தால் அழியா சுவடுகள்:- 4

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. அந்த இளைஞன் தான் குதிராம் போஸ்.

குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர்.

குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார் .

இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார்; உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவரும் சேர்ந்து அவர் வரும் வண்டியில் குண்டு வீசிவிட்டு தப்பி விட்டனர் ; அதில் இருந்தது அவரின் மனைவி மற்றும் மகள் அவரில்லை; இதை அறிந்து ஏகத்துக்கும் வருந்தினார் குதிராம் போஸ் .

அப்பாவிகளை எப்பொழுதும் கொல்வதில்லை எனும் கொள்கைகொண்டவர்கள் அவர்கள் .பிரபுல்லா அங்கேயே சுட்டுக்கொண்டு இறந்து விட வழக்கு விசாரணைக்கு பிறகு தூக்கு என ஆங்கிலத்தில் அறிவித்தார் நீதிபதி.

“ஏன் சிரிக்கிறாய் ?நான் சொன்னது புரிந்ததா ?”என கேட்க ,”நன்றாக புரிந்தது “என சொல்ல, இங்கு இருப்பவர்களுக்கு எதாவது சொல்ல வேண்டுமா என அவர் கேட்க ,”வேண்டுமானால் உங்களுக்கு எப்படி வெடிகுண்டு தயாரிப்பது என சொல்லித்தருகிறேன்” என சொல்லி ”என் வருத்தமெல்லாம் Majistrate Kingsford தண்டனைப் பெறாமல் தப்பிவிட்டான் எனபதே”. என அவன் சொன்ன பொழுது வயது பதினெட்டு தான் ! தூக்குதண்டனை விதிக்கபட்டு கையில் பகவத் கீதையுடன், வாய் “வந்தே மாதரம்” என முழங்க அவர் தூக்கிலிடபட்ட பொழுது பதினெட்டு வயது ஏழு மாதம் பதினொரு நாள் வயதான இளைஞன் அவர்…

அவர் தூக்கிலிடபட்ட பின் அவரின் அஸ்தியை பெண்கள் கொண்டு சென்று தங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கும் பாலில் கலந்து கொடுத்தார்கள். தேசபக்தி தங்கள் பிள்ளைகளின் ரத்தத்தில் பாயவேண்டும் என்பதற்காக அப்படி செய்தார்களாம் ! குதிராம் இறக்கிற பொழுது அவரின் சித்தி கருவுற்று இருந்தார். இப்படி ஒரு கவிதை எழுதி வைத்துவிட்டுப்போனார் குதிராம்.

“ஒருமுறை விடைகொடு அம்மா!
என் அருமை அம்மா!
நான் மீண்டும் பிறப்பேன்
சித்தியின் வயிற்றில்…
பிறந்தது நான்தான் என்பதையறிய
குழந்தையின் கழுத்தைப் பார்
அதில் சுருக்குக் கயிற்றின்
தடம் இருக்கும்”…..

அவனது மரணவேளையில் எப்படி இருந்தான் என்பதை அப்போதைய பத்திரிக்கைகள் வெளியிட்டன.

12 – 8 – 1908 அமிர்த பஜார் பத்திரிகை ‘குதிராமின் முடிவு’ என்ற தலைப்பிட்டு, பெரிய எழுத்துக்களில் தலைப்புச் செய்தி வெளியிட்டிருந்தது. “மகிழ்ச்சி யோடும் புன்னகையோடும் அவன் மரணமடைந்தான்.அவன் தூக்கு மேடையை நோக்கி கம்பீரமாக நடந்து சென்றான். தலையில் கறுப்புத்துணியை மூடும் வரை அவன் மரணத்தை அலட்சியப்படுத்தும் புன்னகையோடு நின்றான்” என்று அப்பத்திரிகை, செய்தி வெளியிட்டது.

பெங்காலி என்ற பத்திரிகையின் நிருபர் எழுதுகிறார்: “நான்கு போலீசார் குதிராமை அழைத்துவந்தனர். அவன் விறைப்பாக நடந்து வந்தான். வேகமாய் நடக்கும்போதே எங்களைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போனான். அவனது தைரியமும், மிடுக்கும், மரணத்தைக் கண்டு அஞ்சாமையும் கண்டு எங்களுக்கு சிலிர்த்துவிட்டது.”

அந்த வெள்ளைக்கார நீதிபதிக்குத் தன்னால் விதிக்கப்பட்ட தண்டனையின் கடுமைபற்றி அந்தப் பையன் குதிராமுக்குப் புரியுமா என்ற சந்தேகம் வந்தது. ஏனெனில் தீர்ப்பைக்கேட்டு அவன் சந்தோசமாகச் சிரித்துக் கொண்டிருந்தான். அவனிடம் பயமோ, துயரமோ சிறிதும் தென்படவில்லை.

குதிராம், பிரபுல்லசாகிபின் தியாகம் வங்க இளைஞர்களிடையே பெரும் எழுச்சியை ஏற் படுத்தியது. அவர்களது தியாகத்தைப் போற்றும் பாடல்கள் புனைந்து மக்கள் பாடினர். விடுதலைப் போரில் வங்க மக்களை ஈர்த்ததில் இந்த இரு தியாகிகளும் புகழ்பெற்றனர். ‘வந்தேமாதரம்’ என்ற கோஷம் வங்கம் முழுதும் எதிரொலித்தது.

Read Full Post »

12066029_1022753674448841_5207711536653819889_n

காலத்தால் அழியா சுவடுகள் 3:

வீரமும், தியாகமும், தேசபக்தியும் தெரியாத நம் குழந்தைகளுக்கு இத்தகைய நிகழ்வுகளை சொல்லி தியாக சிந்தனையும் தேச பக்தியையும் வளர்ப்போம்.

கப்பல் ஓட்டிய சிதம்பரனாருக்கும் சுப்பிரமணிய சிவாவுக்கும் ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுத்த ஆஷ் என்ற ஆங்கிலேய அதிகாரி,பதிவி உயர்வு பெற்ற திமிரில் தலைகால் தெரியாமல் நடந்தான். மக்களை அடக்குவதில் தனது அதிகாரத்தை தாறுமாறாகப் பயன்படுத்தினான். அடக்குமுறைகள் கொண்டு வந்து தேசபக்தர்களை அலைக்கழித்துக் கொண்டிருந்தான். அவன் பெயரை கேட்டதுமே மக்கள் நடுங்கும் நிலை.

ஒருமுறை இந்த கலெக்டர் ஆஷ் கொடைக்கானலுக்குப் புகை வண்டியில் சென்று கொண்டிருந்தான். அவ்வண்டி மணியாச்சி சந்திப்பில் நின்றது. அந்நேரம் ஆங்கிலேயர் போல் உடை அணிந்திருந்த ஒரு பாரதீய இளைஞர், ஆஷ் இருந்த பெட்டியினுள் புகந்தார். அவனுக்கு எதிரே போய் நின்று தன் கைத் துப்பாக்கியை எடுத்து அவன் நெஞ்சுக்கு நேரே நீட்டினார். அடுத்த கணம் துப்பாக்கிக் குண்டுகள் ஆஷின் நெஞ்சைத் துளைத்தன. மேலோரை வெஞ் சிறையில் வாட வைத்து நல்லோர் இதயங்களில் துயரத் தீயை வளர்த்த அக்கொடியோன் பிணமாக சாய்ந்தான்.

அந்த இளைஞன் அங்கிருந்து மின்னலென மறைந்து பயணிகள் கழிவறையில் புகுந்து துப்பாக்கியின் விசையைத் தட்டினான். அதிலிருந்த தெறித்த குண்டுகள், அவன் தலையைச் சிதற வைத்தன. இவ்வாறு அவ்விளைஞன் நாட்டுக்காக தன்னையே மாய்த்துக் கொண்டான். அவன் தான் வாஞ்சிநாதன்.

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில், 1886-ம் ஆண்டு ரகுபதி ஐயர், ருக்மிணி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் வாஞ்சிநாதன். இயற்பெயர் சங்கரன். ஆனால், அவரை வாஞ்சி என்றே அனைவரும் அழைத்துள்ளனர். செங்கோட்டையில் பள்ளிப்படிப்பை முடித்த வாஞ்சி, திருவனந்தபுரத்திலுள்ள மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். கல்லூரியில் படிக்கும்போது பொன்னம்மாளுடன் திருமணம் நடந்தது. தொடர்ந்து, புனலூர் வனத்துறையில் பணியாற்றினார் வாஞ்சி. ஆங்கிலேய அரசாங்கத்தை எதிர்த்து நாடெங்கும் நடத்தப்பட்ட போராட்டம் உச்சத்தை அடைந்திருந்த நேரம். அந்த நேரத்தில், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோரின் மேடைப் பேச்சுகளால் திருநெல்வேலி பகுதியில் சுதந்திர இயக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இவற்றால் ஈர்க்கப்பட்ட வாஞ்சியும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு தன்னை இந்த தேசத்திற்காக தியாகம் செய்தான்.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை இன்றைய மாணவ சமுதாயம் தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்து வகுப்புகளிலும் பாடத் திட்டத்தில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் சுதந்திரப் போராட்ட வீரர்கள் இந்திய மண்ணில் சிந்திய ரத்தத்தின் வலிமையை மாணவ சமுதாயம் அறிய முடியும்.

Read Full Post »

பாரதம் பெயர் காரணம்

 

உலக வரலாற்றிலேயே முதன்முறையாக தாம் பிறந்து வாழ்ந்த பூமியைத் தாய்நாடு என்று சிறப்பித்துப் பாராட்டி, உறவு கொண்டாடிய உலகின் முதல் சமுதாயம் ஹிந்து சமுதாயமே. பூமி நமது தாய், நாம் பூமித்தாயின் புதல்வர்கள் என்ற மனோபாவம் இருப்பதால் தான் நாம் வாழும் நாடு நமது தாய்நாடு என்ற எண்ணம் நமக்கு உதித்தது.

நமது தேசத்தின் வடக்கில் ஹிமாலயமும் தெற்கில் பாரத அன்னையின் பாதங்களைப் பணியும் ஹிந்து மகாசாகரமும், கிழக்கில் கங்கை நதி கடலோடு கலக்கும் கங்கா சாகரமும் (வங்காள விரிகுடா) மேற்கே சிந்து நதி கடலில் கலக்கும் சிந்து சாகரமும் (அரபிக் கடல்) எல்லைகளாக அமைந்துள்ளன.

198241_122277824597525_1344583902_n

ஆன்மீக செல்வத்தின் உறைவிடமாய் பாரதம் திகழ்ந்தாலேயே இந்த நாட்டிற்கு பாரதம் என்ற பெயர் ஏற்பட்டது. பா – என்ற சமஸ்கிருதச் சொல்லிற்குச் “ஒளி” என்று பொருள் உண்டு. இதனாலேயே உலக இருளை அகற்றும் ஆதவனை பாஸ்கரன் என்று கூறுகிறோம். ஞாயிறு என்பதனை ‘பாநு’ என்று குறிக்கின்றோம். “ரத” என்ற சொல்லிற்கு ‘முழ்கியிருத்தல் — திளைத்திருத்தல்’ என்ற பொருள் உண்டு. எனவே “ஞானத்தில் திளைத்திருந்த பூமி” இதுவாகையால் இதற்கு பாரதம் என்ற பெயர் ஏற்பட்டது.

வேதமுடையதிந்த நாடு, நல்ல வீரர் பிறந்ததிந்த நாடு,
தேசமில்லா ஹிந்துஸ்தானம் — இதை தெய்வமென்று கும்பிடடி பாப்பா!
—மகாகவி பாரதி…..

Read Full Post »

இந்தியா அழிந்துவிடுமா ?

ந்தியா அழிந்துவிடுமா ? அது அப்படி அழிந்துவிடுமானால் உலகில்ருந்து எல்லா ஞானமும் அழிந்து போய்விடும். சமயத்தின் மீது நமக்குள்ள இதயபூர்வமான இனிய அனுதாப உணர்ச்சிகள் எல்லாம் அழிந்து போய்விடும். எல்லா உயர்ந்த இலட்சியங்களும் மறைந்து போய்விடும். அவை இருந்த இடத்திலே காமமும் ஆடம்பரமும் ஆண்தெய்வமாகவும் , பெண் தெய்வமாகவும் குடிகொண்டு ஆட்சி செய்யும். பணமே அங்குப் பூசாரியாக உட்கார்ந்து கொள்ளும். வஞ்சகம், பலாத்காரம் , போட்டி ஆகியவற்றையே அது தன்னுடைய பூஜைக்கிரியை முறைகளாக வைத்துகொள்ளும்.மனித ஆன்மாவை அது பலிபீடத்தில் பலியாக்கும். ஆனால் அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி என்றுமே நடக்கப் போவதில்லை….

420658_306038159453733_1194254720_n

 உயர்ந்த பண்பு , ஒழுக்கம் , ஆன்மிகம் ஆகிய எல்லாச் சிறந்த பெருமைகளுக்கும் பிறபளித்தவள் நமது இந்திய தாய். முனிவர்கள் பலர் வாழ்ந்த நாடு இந்த நாடு. கடவுளுக்கு சமமான மகான்கள் இன்னுமும் இந்த நாட்டிலே தான் வாழ்ந்து வருகிறார்கள். இத்தகைய இந்தியாவா அழிந்து போய் விடும்?

இந்த உலகிலே எந்த நாடேனும் புண்ணிய பூமி என்னும் பெயருக்கு உரிமையுடையது என்றால் அது நாமது பாரத நாடே ஆகும். ஆன்மாக்கள் எல்லாம் கர்மபலன் அனுபவிப்பதற்கு வந்து சேர வேண்டிய நாடும், கடவுள் வழியில் செல்லும் ஒவ்வொரு ஆன்மாவும் கடைசியாக அடைவதற்குரிய வீடும் நமது பாரத கண்டமே ஆகும். மனித சமூகத்தின் பெருந்தன்மை, தயாளம், தூய்மை, சாந்தம் என்னும் குணங்கள் பரிபூரணம் அடைந்திருப்பதும், அகநோக்கிலும் ஆன்மீகத்திலும் தலை சிறந்ததுமான நாடு ஒன்று உண்டு என்றால், அது நமது பாரத நாடே ஆகும்.

இப்புண்ணிய பூமியில் சமயமும் சாஸ்திரமும் தழைத்து வளர்ந்தன. மகாபுருஷர்களுக்குப் பிறப்பளித்த தேசமும், தியாக பூமியும் நமது தாய் நாடே ஆகும். பண்டைய காலத்தில் இருந்து இன்று வரை மனித வாழ்க்கையின் மகோன்னதமான இலட்சியம் விளங்கி வந்திருப்பது இந்த நாட்டிலேதான்.

மற்ற நாடுகளில் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை உலகியல் என்னும் தீ எரித்து வருகின்றது. அந்தத் தீயை அணைப்பதற்கான ஜீவ நீர் இந்நாட்டிலே உண்டு.

பரந்த இவ்வுலகத்தின் வரலாறு முழுவதையும் ஆராய்ச்சி செய்து பாருங்கள், உன்னதனமான இலட்சியம் ஒன்றை நீங்கள் எங்கே கண்டாலும் அதற்குப் பிறப்பிடம் இந்தியாவாக இருப்பதைக் காண்பீர்கள். மிகப் பண்டைய காலந்தொட்டு பாரத நாடு மக்கள் குலத்துக்கு உயர்ந்த கருத்துக்கள் அளிக்கும் ஓர் அருஞ்சுரங்கமாக இருந்து வந்திருக்கிறது; உன்னதமான இலட்சியங்களுகுப் பிறப்பளித்து அவற்றை உலக முழுவதும் பரவலாகப் பரப்பியும் வந்திருக்கிறது.

 எனது அருமை சகோதரா! ஒரு பழைய விளக்கை எடுத்துக்கொண்டு , இந்த பரந்த உலகிலுள்ள நாடு நகரங்கள் , பட்டி தொட்டிகள் , காடு கழனிகள் எல்லாவற்றின் ஊடேயும் உன்னை நான் பின் தொடர்கிறேன். உன்னால் முடியுமானால் , இப்படிப்பட்ட தலைசிறந்த மகான்கள் வேறு எந்த நாட்டிலாவது தேடிக் காட்டு , பார்க்கலாம்.

நமது தாய் நாட்டிற்கு இந்த உலகம் பட்டிருக்கும் கடன் மகத்தானது. நாட்டுக்கு நாடு எடுத்து  ஒப்பிட்டு பார்த்தால் பொறுமை உள்ள இந்துவுக்கு , சாதுவான  இந்துவுக்கு உலகம் கடமைப்பட்டிருபதை போன்று , பூமியிலே வேறு எந்த இனத்துக்கும் உலகம் இவ்வளவு பெரிய அளவிலே கடன்பட்டிருக்கவில்லை என்பதை நீ பார்க்கலாம்…….

—–சுவாமி விவேகானந்தர்…

Read Full Post »

பாரதத்தின் பெருமை !!!

நம் அன்னைபூமியின் தொன்மையையும் உயர்வையும் எத்தனையோ பாடல்களும், உரை நடைகளும் எடுத்துரைத்துள்ளன.  இந்த தேசத்தின் பெருமை அதன் வீரமும் ஞானமும் மிக்க வரலாறு மட்டுமல்ல, அதன் மைந்தர்களாகிய நம்முடைய உயரிய சிந்தனைகளும், பேணி வளர்த்த கலாச்சாரமும்தான். உண்மையில்   இன்றைக்கு நம் பாரத மாதா தளர்வுற்று இருக்கிறாள். ஏனென்றால், நம்முடைய தேசத்தின் வலி மிகுந்த வரலாறும், பெருமை மிக்க ஆக்கங்களும் இன்றைய இளையவர்களுக்கு தெரிய வைக்கப்படவில்லை. சுதந்திர தினம் ஞாயிற்றுக் கிழமையில் வரவில்லை என்ற மகிழ்ச்சிதான் மிகுந்து வருகிறது. செவி வழிச்செய்திகளாக அடுத்தடுத்த தலைமுறைக்கு மாற்றப்பட்டு வந்த மண்ணின் மரபும் வீரமும் ஏதோ ஒரு கட்டத்தில் நூலறுந்து போய்விட்டது போலும். மனம் கூசாமல் தாய் நாடு தரமிழந்து விட்டதாக பேசுகின்றனர்

இன்றைய நிலையிலிருந்து இன்னும் நிலை பிறழாமல் நம் தேசத்தை உணர்ந்து  மீட்டெடுக்கும் கடமை நமக்கு உள்ளது என்பதை உணர்வோம். இந்த தலைமுறையிலோ அல்லது அதற்கு முந்தைய தலைமுறையிலோ தொடர்பு அற்றுவிட்ட தொன்மை பூமிக்கு ஒரு பந்தம் உண்டாக்குவோம். நினைவுகளாய், சிதிலங்களாய் மாறிக் கொண்டிருக்கும் பெருமை மிக்க வரலாற்றினை மீண்டும் தொடர்வோம்.  மொழி, இனம், மதம் வேற்றுமைகளை தாண்டி நம் தேசத்தின் பெருமையினையும், பெருமை மிக்க மைந்தர்களையும் மீண்டும் அடையாளம் காட்ட இந்த தொடர் ஆரம்பிக்கிறது.

ஆதி காலத்தில் இருந்து தொடங்குவோம். சில பெருமைமிக்க செய்திகளை தருகிறேன். கி.முக்களிலேயே அறிவியல், கணிதம், வானவியல், மருத்துவம் ஆகியவற்றில் சிறந்திருந்த நம் மூதாதையர்களின் சிறப்புமிக்க குறிப்புகள் வேதங்களிலும், சித்தர் பாடல்களிலும் ஓலைச்சுவடிகளாக பதியப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு தருகிறேன்.

அறிவியல் :

*சிறப்பான மருத்துவ குறிப்புகளை சித்தர்களின் ஓலைச்சுவடிகளில் காண முடிகிறது. அகஸ்த்தியர் – மூலிகை மருத்துவத்திலும்(microbiology), போகர் – கனிம மருத்துவத்திலும்(chemical components), புலிப்பாணி விலங்குகளை (biotechnology) பயன்படுத்திய மருத்துவ முறைகளிலும் சிறப்பான குறிப்புகள் தந்துள்ளனர். கதிரியக்க குறிப்புகளையும், அணு அளவில் மாற்றங்களை நிகழ்த்தக் கூடிய ரசவாத குறிப்புகளையும் சுவடிகளின் காணமுடிகிறது கி.மு 3000 அணுவின் அமைப்புகளை மாற்றி வேறு ஒரு கனிமமாக மாற்றும் வித்தையை போகர் குறிபிட்டுள்ளார்.

*இரத்தும் உறிஞ்சும் அட்டைகளை(leach) வைத்து இப்போது ஆராய்ச்சிகள் உலக அளவில் நடைபெறுகின்றன. முதல் முதலில் 1020ல்தான் இது பற்றிய ஆராய்ச்சிகள் ஆரம்பித்தன. ஆனால் 2500 வருடங்களுக்கு முன்பே ஆயுர்வேதத்தில் இது பற்றிய குறிப்புகள் உள்ளன. மருத்துவ கடவுளாக கருதப்படும் தன்வந்திரி பகவானின் கையில் மருத்துவ உபகர்ணங்களுடன் leach உள்ளது.

*அகஸ்திய சம்ஹிதா என்ற நூலில் ஒரு மின்சார பெட்டரியை தயாரிக்கும் முறை சொல்லப்பட்டுள்ளது.

வானவியல்:

ரிக் வேதத்தின் குறிப்புகளை கொண்டு கி.பி 1315ல் சாயனாச்சார்ய என்ற விஜய நகரப்பேரரசின் அறிஞர் ஒளியின் வேகத்தை குறிப்பிட்டுள்ளார். “ஓ, சூரிய கடவுளே அரை நிமிஷாவில் 2022 யோசனைகள் கடந்து வரும் உன்னை வணங்குகிறேன்” ஒரு யோசனை என்பது 9 மைல்கள், நிமிஷா என்பது 8/75 வினாடிகள்.. அவருடைய குறிப்பின்படி ஒலிவேகம் -186,413.22 மைல்/வினாடி. நவீன கணிப்பு 186,300மைல்கள்/வினாடி.

*சூரிய கதிர்களில் ஏழு வர்ணங்கள் உள்ளதை கி.மு.1500லேயே ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதையே ஏழு குதிரைகளாக தேரில் பூட்டியுள்ளதாக காட்டினர். நவீன கருத்தின்படி 1671ல் நியூட்டன் முதன்முதலில் ஸ்பெக்டரம் என்று குறிப்பிட்டார்.

*வேதங்களின்படி, ஒரு பூஜையினை செய்வதற்குமுன் சங்கல்பமாக கூறப்படுகின்ற வாக்கியத்தில் உலகம் ஆரம்பித்த நாலில் இருந்து இன்றைய நாளினை குறிக்கிறோம்.”த்விதீய பரார்த்தே, ஸ்வேத வராககல்பே, வைவஸ்வத மன்வந்த்ரே, அஷ்டாவிம்ஸ்திதமே, கலியுகே” என்று வரும். இதன்படி

ஒரு மகாயுகா = 4 யுகங்கள் = 43,20,000 வருடங்கள்

ஒரு மன்வந்திரம் = 30,84,48,000 வருடங்கள் (71 மகாயுகா+1 க்ரேதா யுகம்)

ஒரு கல்பம் = 432,00,00,000 (14 மன்வந்திரம்+1 க்ரேதா யுகம்) அல்லது 1000 மகாயுகம்

ஒரு கல்பம், இதுதான் உலகத்தின் வயதும்.

நவீன முறைப்படி 454,00,00,000 ரேடியோமெட்ரிக் முறையில் கணிக்கப்பட்ட வயது. பூமியுடனேயே பிறந்ததாக சொல்லப்படும் நிலவின் மாதிரி கற்களிலும் ஆராய்ச்சி செய்து இது உறுதிபடுத்தப்பட்டது.

கணிதம்:

கி.மு -3000 – நீளம், எடை ஆகியவற்றை குறிக்கும் அளவீடுகள் வரையறுக்கப்பட்டன.

கி.மு 1500 – வேதகாலம் – வானவியல் கொள்கைகள், கணித வரைபாடுகள், எண்கள் ஆகியன உருவாக்கப்பட்டன.

கி.மு 200 – பூஜ்யம் குறிப்பிடப்பட்டது. அதுவரை நேர்மறை எண்கள்(+) மட்டுமே குறிப்பிடப்பட்டன, எதிர்மறை எண்களையும்(-) குறிப்பிட முடிந்தது.

கி.பி 400 – 1200- கணித சாஸ்திரத்திற்கான முக்கியமான காலகட்டம். கணிதவியல் வல்லுனர்கள் ஆர்யபட்டா, பாஸ்கரா, ஸ்ரீதரா ஆகியோரின் காலம்.

ஆர்யபட்டா ஒரு நாள் என்பது 23 மணிகள்,56 நிமிடங்கள், 4 வினாடிகளும் 0.1 விகிதத்தையும் கொண்டது என்று கணித்தார்.

நவீன கணக்குப்படி 23 மணி,56 நிமிடம்,4 வினாடி மற்றும் 0.091 விகிதம் என்று கணிக்கப்பட்டுள்ளது.அவருடைய ஆர்யபாட்டியா என்ற நூலில் ஒவ்வொருரு கோள்களின் தொலைவும், அது சூரியனை சுற்றி வரும் நாட்களும் நவீன கணிப்புடன் ஒப்பிடும் அளவிற்கு மிகச்சரியாக கூறப்பட்டுள்ளன.

யோகா:

இன்றைக்கு உலகம் முழுவது கொண்டாடிக் கொண்டிருக்கும் யோகாசன முறைகள் பதஞ்சலி முனிவரால் உருவாக்கப்பட்டன. இவர் கி.மு 147ல் வாழ்ந்தவர்.

காஷ்யப ரிஷி – முதன்முதலில் அணு என்ற ஒன்றை குறிப்பிட்டார். அணுவையும்(atom) பிளந்து பரம அணு (ந்யூட்ரான்?) என்று ஒன்று உள்ளதையும் குறிப்பிட்டார்.

Read Full Post »

இந்து மதம் – கேள்வி பதில்

 

ஹிந்துத்துவம் என்பது என்ன?

பதில் : “யாரும் ஊரே யாவரும் கேளிர்” என்பதே ஹிந்துத்துவம். “நீ வேறு, உன்னை அழிப்பதே எனது கடவுள் எனக்கு சொல்லிக் கொடுத்தது” என்று சொன்னால் அந்த கூட்டம் ஹிந்துத்துவத்திற்கு எதிரானது. மனிதநேயத்தின் இன்னொரு பெயர் ஹிந்துத்துவம்.

ஹிந்து மதம் எப்போது தோன்றியது?

பதில் : எப்போது மனிதன் சிந்திக்கத் துவங்கினானோ அப்போதே.

ஹிந்து மதத்தில் ஏன் இத்தனை தெய்வங்கள் இருக்கின்றன? ஒரே தெய்வம் என்று ஏன் இருக்கவில்லை?

பதில் : ஒரே தெய்வம் என்று ஏன் இருக்கவேண்டும்? எல்லையில்லா இறையை நமது புரிதலுக்கேற்ப புரிந்து கொள்கிறோம். அந்த புரிதல் ஆளுக்காள் மாறுபடும் அல்லவா? எல்லா பாதைகளும் நம்மை இறைவனிடமே அழைத்துச் செல்கின்றன. எந்த தெய்வத்தை வணங்கினாலும் நாம் இறையையே வணங்குகிறோம் என்பதே நமது ஹிந்துநெறியின் அடிப்படைக் கொள்கை. இதுவே நம்மை மிகவும் சகிப்புத்தன்மையுள்ளவர்களாகவும், அமைதியையும், அன்பையையும் கொண்டிருக்கும் அற்புதமான சமுதாயமாகவும் வைத்திருக்கிறது. எப்போதெல்லாம் ஒரே கடவுள் என்ற கருத்து மக்களிடையே பரவுகிறதோ, உடனடியாக அந்த மக்கள் கூட்டம் அசுர சக்தியாக மாறி, மற்றவர்களை அழிக்க துவங்கிவிடுவதை நாம் சரித்திரத்தில் பார்க்க முடிகிறது.

சிறுதெய்வ வழிபாடு என்பதை ஹிந்து மதம் ஏற்றுக்கொள்கிறதா?

பதில் : ஆம். அதிலென்ன சந்தேகம். சிறு தெய்வ வழிபாடு நமது வழிபாட்டு முறையின் பிரிக்கவியலா அங்கம்.

புராணங்கள் உண்மையா பொய்யா?

பதில் : உண்மை. பல சமயங்களில் அவற்றில் உயர்வு நவிற்சியும், சில கதைகளும், கற்பனைகளும் கலந்திருக்க வாய்ப்புண்டு. புராணம் என்றாலே சரித்திரம் என்றுதான் அர்த்தம்.

புண்ணியம் – பாவம் என்பது என்ன?

பதில் : நல்லது செய்தால் புண்ணியம். கெட்டது செய்தால் பாவம்.

மகாபாரதம் கூறுகிறது –

श्रूयतां धर्मसर्वस्वं श्रुत्वा चैव अवधार्यताम् ।

परोपकार: पुण्याय पापाय परपीडनम् ॥

ஸ்ரூயதாம் தர்ம ஸர்வஸ்வம், ஸ்ருத்வா சைவாவதார்யதாம் |

ப்ரோபகார: புண்யாய, பாபாய பரபீடனம் ||

“தர்மத்தின் சாரம் முழுவதையும் கூறுகிறேன், கேள், கேட்டு அதன்படி நட. பிறருக்கு நன்மை செய்தல் புண்ணியம். பிறருக்கு தீமை செய்தல் பாவம்”

தர்மம் என்பது எது?

பதில் : இயல்பாக இருப்பது தர்மம். இயல்பை மாற்றி ஆசையின், கோபத்தின், மனமாச்சர்யங்களின் உந்துதலால் செய்பவை எல்லாமே அதர்மமாகும்.

ஏன் நல்லவர்கள் கஷ்டப்படுகிறார்கள்? தீயவர்கள் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ்கிறார்கள்?

பதில் : நல்லது , கெட்டது குறித்த myopic பார்வையே இது குறித்த கேள்வியை எழுப்புகிறது. நாமெல்லாம் ஒரு பெரும் பிரபஞ்சத்தின் அங்கங்கள். இங்கே செய்யும் செயல்கள் பலன்களை தருவதற்கு காலம் பிடிக்கின்றன. இந்த சுழற்சியில் கெட்டது செய்துவிட்டு தப்புபவர்கள் நரக நிலையிலோ அல்லது அடுத்த பிறவியொலோ தமது தீய செயல்களுக்கான பலன்களை அனுபவிக்கின்றார்கள்.

சோதிடம் உண்மையா?

பதில் : உண்மைதான் என்று அனுபவப்பட்ட பலர் சொல்கிறார்கள். உண்மையில்லை என்றும் சிலர் சொல்கிறார்கள். இது அவரவர் அனுபவம் சார்ந்தது.

“சாமி” வந்து விட்டது என்று ஆவேசம் வந்து ஆடுபவர்களை நம்பலாமா?

பதில் : அது ஆவேசம் வந்து சாமி என்ன சொல்கிறது என்பதைப் பொறுத்து இருக்கிறது.

தீமிதித்தல், அலகு குத்தி காவடி எடுத்தல் போன்றவை தேவைதானா?

பதில் : மற்றவர்களை தீயில் தள்ளாதவரை, மற்றவர்களை குத்தாதவரை – நம்மை வருத்தி இறைவனை அடைய முயற்சிக்கும் முயற்சிகளில் என்ன தவறு இருக்கிறது?

ஹிந்து என்றால் உண்மையில் என்ன அர்த்தம்?

பதில் : இயல்பானவர்கள் என்றர்த்தம்.

Read Full Post »

              இந்தியாவில் மாற்றம் வருமா? 

             இந்தியா ஒரு காலத்தில் கலை, கல்வி, பண்பாடு, ஒழுக்கம், அறிவியல், உழைப்பு, கற்பு, எந்த நிலையிலும் நீதியை நாட்டுவது என அனைத்திலும் உயர்ந்த நிலையில் இருந்தது. மக்களின் வாழ்க்கை நிலையும் உயர்ந்த நிலையில் தான் இருந்தது. பசி, பட்டினி என்பதும் மிக மிக குறைவு.

அதேபோல் இதே இந்தியா தான் நீதியை நிலை நாட்ட மகனை தேரின் சக்ரத்தால் ஏற்றி கொன்ற மனு நீதி சோழன், மயில் குளிரால் வாடிய போது தன் போர்வையை போர்த்திய பேகன் போன்ற உயர்ந்த குணம் கொண்ட மன்னர்களையும், 2000 ஆண்டுகளுக்கு முன்பே மூளையில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்த சுஸ்ருதர் போன்ற மருத்துவ அறுவை சிகிச்சை விஞ்ஞானியையும், எந்த நோயையும் குணப்படுதும் வல்லமை கொண்ட பல சித்த மருத்துவர்களையும், வான்வெளியை பற்றி நன்கு அறிந்த ஆரியபட்டர் என்ற வானியல் விஞ்ஞானியையும், கணித மேதை பாஸ்கராச்சாரியர் போன்றோரையும் பெற்றிருந்தது. ஆகாய விமானம் தயாரிப்பது பற்றிய குறிப்புகளும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம்மிடம் இருந்துள்ளது.

மேலும் 1500ஆண்டுகளுக்கு முன்பே தரமான கட்டடம் கட்டும் தொழில்நுட்பம், பெரிய கப்பல் கட்டும் தொழில்நுட்பம், கலைநயம் மிக்க ஆடைகளை தயாரிக்கும் தொழில்நுட்பம் போன்ற பலவகை தொழில்நுட்பத்தையும் பெற்று இருந்தோம்.

அதேபோல் 1500 ஆண்டுகளுக்கு முன்பே 10,000 மாணவர்கள் படித்த நாளந்தா பல்கலைக்கழகம், 4000 ஆண்டுக்களுக்கு முற்பட்ட சிந்து சமவெளி நாகரீகமும், சமஸ்கிருதம், தமிழ் போன்று உலகின் பழமையான செம்மொழிகளையும் பெற்றிருந்த நாடு இது. இதில் சிறப்பு என்னவென்றால் 2000 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு மொழிக்கு இலக்கணம் எழுதப்பட்டது அநேகமாக நம் தமிழ் மொழிக்கு மட்டுமே. ஆனால் உலகின் பல மொழிகளுக்கு அப்போது எழுத்து வடிவமே கிடையாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மொழிக்கு இலக்கணம் எழுதிய தொல்காப்பியன், இரண்டே அடியில் மனிதன் வாழ்க்கையின் அனைத்து நிலைகளுக்கும் பொருந்தும் நெறிகளையும் சொன்ன வள்ளுவன், “வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்” என்று சொன்ன வள்ளலார் போன்ற உலகின் தலை சிறந்த மாமனிதர்கள் வாழ்ந்த நாடு இது.

1835  இல் மெக்காலே பிரபு பிரிட்டன் அரசுக்கு கடிதம் எழுதும் போது, “இந்தியாவில் பிச்சைக்காரர்கள், திருடர்களை காண்பது அரிதாக உள்ளது. மேலும் நிறைய செல்வங்களும், வளங்களும் உள்ளது” என எழுதி உள்ளார். அதன் பின் தான் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை அடிமையாக்கி வளங்களை கொள்ளையடித்தார்கள். ஆக 200 ஆண்டுகளுக்கு முன்னர் கூட நமது இந்தியாவில் செல்வங்கள், வளங்கள் அதிகமாகவும், பிச்சைக்காரர்களும், திருடர்களும் குறைவாகவே இருந்திருக்கிறார்கள்.

ஆனால் தற்போதைய இந்தியாவின் நிலை என்ன?

பல உத்தமர்களும், நீதிமான்களும் வாழ்ந்த இந்த நாட்டில் தான் இப்போது ஊழல் என்பது மிக சாதாரண விஷயமாகவும், கொலை, கொள்ளை, லஞ்சம் என்பது அதை விட மிக சாதாரண விஷயமாகவும் எடுத்துக்கொல்லபடுகிறது. தவறு செய்தவர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியும். ஆனால் இன்று நேர்மையாக ஒருவர் இருந்தால் அவரால் நிம்மதியாக வாழ முடியுமா?

அக்காலத்தில் 64 ஆயக்கலைகளையும் நன்கு கற்றறிந்தவர்கள் பலபேர் இருந்தார்கள். ஆனால் இன்று 64 ஆயக்கலைகளின் பெயர்களையாவது தெரிந்தவர்கள் எதனை பேர்? உயர்ந்த நமது பண்பாடு மேற்கத்திய கலாச்சாரத்தால் அழிந்து வருகிறது. உலக மக்கள் பலர் நமது பண்பாட்டை உயர்ந்தது என்று கூறும் போது நாம் நம் கலாச்சாரத்தை ஏன் மதிப்பது இல்லை?

பெண்களை தெய்வமாக வணங்கிய இந்த நாட்டில் இப்போது கற்பழிப்புகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போய்விட்டது. பெற்ற தந்தையே தன் மகளிடம் தவறாக நடந்து கொள்ள முயலும் கொடுமையும் நடக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற நீதியை மறந்து இன்று கள்ளக்காதல் பெருகி விட்டது. கள்ளக்காதலை காத்துக்கொள்ள பெற்ற தாய் தன் குழந்தையை கூட கொள்ளும் கொடுமை அதிகமாகி வருகிறது.

இன்றைய குழைந்தைகளுக்கு பெற்றோர்கள் நமது முன்னோர்களின் வீரம், ஒழுக்கம், பெருமைகள் பற்றி எதுவும் சொல்வதில்லை. ஏன் என்றால் அவர்களுக்கே அது தெரியாது, அப்படியே தெரிந்தாலும் சொல்வதும் மிக குறைவு. அதேபோல் கல்விக்கூடங்களும், பெற்றோர்களும் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுத்தர முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

உலகின் பிற நாடுகளில் நிறைய புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்படுகிறது. அந்நாடுகளின் அரசும் அதை ஊக்குவிக்க நிறைய நிதி உதவி செய்யப்படுகிறது. ஆனால் நமது நாட்டில் அதை பற்றி யாரும் கவலை கொள்வதே கிடையாது. இந்தியாவில் அமையும் அரசுகள் புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்க அதிக நிதி ஒதுக்குவதும் இல்லை, அப்படியே ஒன்று கண்டுபிடித்தாலும் அதை ஊக்குவிப்பதும் இல்லை. ஒவ்வொரு அரசியல்வாதியும் எவ்வளவு கொள்ளை அடிக்க முடியும், கொள்ளை அடித்துவிட்டு அதில் இருந்து தப்பிப்பது எப்படி? என்று மட்டுமே தான் சிந்திக்கிறார்கள்.

நமது கல்வி முறையும் மனப்பாடம் செய்து எழுதுவதையே ஊக்குவிக்கிறது. பிற நாட்டில் உள்ளது போல் செயல்முறை கல்வி இங்கு இல்லாததும் ஒரு காரணம். மாணவர்கள் சிந்தனையை துண்டும் விதமாகவும் , புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பாதாகவும் கல்விமுறையை மாற்றியமைக்க வேண்டும்.

சினிமாவும், கிரிக்கெட்டும் நமது நாட்டின் இரண்டு கண்களை போல் ஆகிவிட்டது. கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இவர்களில் ஏழைகளின் வாழ்க்கை முன்னேற உதவி செய்பவர்கள் எத்தனை பேர்? இவ்வளவு சம்பாதிக்கும் இவர்களுக்கு வரி கட்டுவதில் இருந்து கூட விலக்கு அளிக்கப்படுகிறது. மக்கள் உயிரை காப்பாற்ற தன் உயிரைவிட்ட இராணுவ வீரர்களுக்கு கிடைக்கின்ற மதிப்பை விட இவர்களுக்கே புகழும், மதிப்பும், பெருமையும் அதிகம்.

 சினிமா ஒரு பொழுதுப்போக்கு என்று கூறிக்கொண்டு அதிக ஆபாசம் காட்டப்படுகிறது. இன்றைய படங்களில் பெரும்பாலும் காதல் மட்டுமே சொல்லப்படுகிறது. அதிலும் “இளம் பருவத்தில் உள்ள ஒரு ஆண், பெண்ணின் மீது கொண்டுள்ள காதல் எப்படி கல்யாணத்தில் முடிகிறது”, “காதலை எப்படி வித விதமாக செய்வது” என்ற கதையை கொண்ட சினிமாபடங்களே அதிகம். இந்த மாதிரியான கதை கொண்ட சினிமா படங்கள் நாட்டிற்கும், நாட்டில் உள்ள மக்களின் வாழ்க்கை நிலை உயர வழி வகுக்குமா?.

இளம்பருவத்தில் ஏற்படும் காதல் மட்டும் தான் ஒரு மனிதனின் வாழ்க்கையில் முக்கியமா? சினிமாவில் காட்டப்படும் இது போன்ற கதைகளால் நம்ம இளைஞர்களும் அவர்களின் அதிஉன்னதமான இளமை பருவத்தை பாழ்படுத்திக் கொள்வதோடு,  நாட்டின் கலாச்சாரத்தையும் சீரழிக்கிறார்கள்.

அதேபோல் பெண்களுக்கு சம உரிமை என்பதும் இன்னும் ஒரு சொல்லாக மட்டுமே உள்ளது. இன்றைய பெண்களில் பெரும்பாலானோர் தங்களின் தோற்றத்தின் அழகை எப்படி கூட்டுவது? அழகாக எப்படி ஆடை அணிவது? என்பதை பற்றி சிந்திப்பதே அதிகம்.

இன்றைய பெண்களில் நாட்டு நடப்பை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுபவர்கள் எத்தனை பேர்? தங்களின் திறமையையும், அறிவையும் நிரூபித்தவர்கள் மிக குறைவு. தினசரி பத்திரிக்கைகளை படிக்கும் பெண்களும், தொலைக்காட்சியில் வரும் செய்திகளையும் பார்ப்பவர்களும் எத்தனை பேர்? ஆனால் தொலைக்காட்சியில் வரும் தொடர் நாடகங்களை பார்க்கும் பெண்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமென்பதில்லை.

அரசியல் பற்றி நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. ஜாதி, மதங்களை ஒழிக்கின்றோம் என்று கூறிக் கொன்று நாட்டில் மத கலவரங்களை தூண்டி விடுகிறார்கள். இன்றைக்கு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெரும் பாலும் அதிக பணம் கொண்டவர்களாகவும், அதிக குற்ற வழக்குகள் கொண்டவர்களாகவும் உள்ளார்கள். இவர்கள் அரசியல் வாதியாக வரும்போது ஏழைகள் பற்றியும்,நாட்டில் குற்றங்கள் குறைய புதிய வழிமுறைகள் பற்றியும் எப்படி சிந்திப்பார்கள்.

சுவாமி விவேகானந்தர் கூறியது:

புதிய இந்தியா ஒரு புறம் சொல்கிறது ; “மேலை நாட்டுக் கருத்துக்கள் ,மொழி ,உணவு ,உடை ,நடைமுறைகள் ஆகியவற்றை நாம் பின்பற்றினால்தான் ,மேலை நாட்டினரை போன்று நாமும் உறுதியும் ஆற்றலும் உடையவர்கள் ஆவோம் .”

 மறுபுறம் பழைய இந்தியா சொல்கிறது ;”முட்டாள்கள் ! மற்றவர்களுடைய கருத்துக்களை குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதனால் ஒருநாளும் அவை ஒருவனுக்கு சொந்தோம் ஆகிவிடா. உழைத்துப் பெற்றாலன்றி எதுவும் உனக்குக்ச் சொந்தோம் ஆகி விட முடியாது . புலியின் தோளைப் போர்த்திகொண்ட பசு , புலியாகிவிடுமா?”

 புதிய இந்தியா சொல்கிறது :”மேலை நாடுகள் செய்வது நிச்சியம் சரியாகத்தான் இருக்கும் .இல்லாவிட்டால் அவை எப்படி இவ்வளவு பெருமை உடையவையாக ஆகியிருக்க முடியும் ?”

 மறுபுறம் பழைய இந்தியா சொல்கிறது ;”மின்னலின் ஒளி மிகவும் நன்றாகத்தான் பிரகாசிக்கும் . ஆனால் அது ஒரு கணம்தான் .குழந்தைகளே ! உங்கள் கண்களை அது கூசச் செய்வதை கவனியுங்கள் . எச்சரிக்கையாக இருங்கள் !”..

Read Full Post »

Older Posts »