பாரதத்தின் மைந்தர்கள்….
நமது பாரத அன்னை நல்ல பல புதல்வர்களை ஈன்று இந்த உலகம் உய்வதற்கு வழிகாட்டும் உத்தமி. அம் மதலைகள் நமக்கு மூதாதையர்களாக விளங்கித் தவம், ஒழுக்கம், திறமை, கலை, தியாகம் எனப் பல வகைகளில் முன்னோடிகளாக விளங்குகின்றனர். அவர்களைத் தெய்வமாக போற்ற வேண்டியது நமது கடமையாகும். அவர்களுள் சிலரை அறிந்து கொள்வோம்.
துருவம்: இறைவனிடம் அசையாத நம்பிக்கை வைத்து மிகப்பயங்கரமான காட்டில் அன்ன ஆகாரமின்றி ஒற்றைக் காலில் தவம் செய்து கடவுளைக் கண்ட ஏழு வயது சிறுவன். இப்போது வானில் வடதுருவத்தில் துருவ நட்சத்திரமாக மின்னி நமக்கு வழிகாட்டிக் கொண்டுள்ளார்.
திருஞானசம்பந்தர்: மூன்று வயதிலேயே தேவாரம்பாடி சிவபெருமானை குளிர்வித்தவர். பக்திக் குழந்தைகளில் முதன்மையானவர்.
நம்மாழ்வார்: பிறந்த நாள் முதலே அன்னபானம் எதுவும் இன்றி, மெளனியாகவே வளர்ந்த திருமாலடியார் ஆவார். ஐந்து வயதிலிருந்தே இறைவன்மீது திருவாய்மொழி மலர்ந்து பாடல்கள் பாடியவர். வேதம் தமிழ் செய்த மாறன் என்ற பெருமை உடையவர். சடகோபர் என்ற திருநாமும் இவருக்கு உண்டு.
நசிகேதன்: தன் தந்தையின் சொற்படி யமதர்மனுக்குத் தானமாக தானே வலிய சென்றவர். அவரைக் குருவாகக் கொண்டு கடோபநிஷதம் நமக்குத் தந்த தெய்வீக சிறுவன் இவர்.
சிரவணகுமார்: கண் பார்வையற்ற தனது பெற்றோரைத் தோளில் காவடியாக தூக்கி கொண்டு தீர்த்தயாத்திரை செய்வித்தவர்.
எத்தனை மகான்கள் இந்த ஞான பூமியிலே அவர்கள் அனைவருக்கும் நமது வணக்கம்.