Feeds:
Posts
Comments

Archive for August, 2012

இந்து மதம் கூறும் கருத்துக்கள்

இந்து மதத்தின் அடிப்படையான புனித நூல் எது ? அந்நூல் கூறுவதைச் சுருக்கமாகத் தர முடியுமா?

இந்து மதத்திற்கு ஆதாரமான புனித நூல்கள் வேதங்களாகும். வேதம் என்றால் மெய்யறிவு அல்லது ஞானம். ஸ்ருதி (வெளிப்பட்ட ஒன்று), ஆகமம் (மரபு வழியாக வழங்கப்பட்டது), நிகமம்  (வாழ்கையின் முடிவான பிரச்சனைகளுக்கு தெளிவாகவும் உறுதியாகவும் தீர்வுகள் தருவது) என்ற மூன்று பெயர்களாலும் வேதம் அழைக்கப்படுகிறது. சாதுக்களும் ரிஷிகளும் இறைவனின் அருளால் தங்கள் அனுபூதியில் உணர்ந்து கொண்டவை வேதங்கள்.

வேதங்கள் நான்கு ரிக் , யசுர் ,சாமம் ,அதர்வணம். இவற்றுள் ரிக் வேதம் தான் மிகவும் பழமையானது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் வானியில் விவரங்களை வைத்து குறைந்தது எட்டாயிரம் வருடங்களுக்கு முன் அது எழுதப்பட்டது என்று பாலகங்காதர திலகரும் , பல ஆராய்ச்சியாளர்களும் சொல்லியிருக்கிறார்கள்.

பிரார்த்தனைப் பாடல்களின் தொகுதியே ரிக் வேதம் என்று சொல்லலாம் யாகங்களுக்கான சடங்குகள் மற்றும் வழி முறைகளைப் பற்றியது யசுர் வேதம். ரிக் வேதத்திலிருந்து பல பிரார்த்தனை பாடல்களை பண் அமைத்து இனிமையாக்கித் தருகிறது சாம வேதம். குறிப்பிட்ட சில யாகங்களில் எப்படி எப்படி அவற்றை ஓத வேண்டும் என்றும் வழிகாட்டுகிறது . நம் முடைய மரபு வழி இசைக்குப் பிறப்பிடமே சாம வேதம் தான். ஆரோக்கியமான வாழ்வு மற்றும் நீண்ட ஆயுள் பெறுவது தொடர்பான அறிவியல் துறையான ஆயுர் வேததத்தையும் , பெரும்பாலும் அற நெறிகளையும் உள்ளடக்கிய தொகுப்பு அதர்வண வேதம்.

ஒவ்வொரு வேதமும் மரபுப்படி நான்கு பிரிவுகள் கொண்டது.

1 . மந்திரம் அல்லது சம்ஹிதை
2 . ப்ராம்மணம்
3 . ஆரண்யகம்
4 . உபநிடதம் .

இந்திரன் , வருணன் , விஷ்ணு போன்ற தெய்வங்களை குறித்து  பிரார்த்தனைகளின் தொகுப்பே சம்ஹிதைகள்.  ப்ராம்மணம் என்பதை பிராமணர் என்ற குலத்தோடு தொடர்பு படுத்தி குழப்பக்கூடாது. யாகங்கள் பற்றிய வழி முறைகளை விளக்குவதே ப்ராம்மணம். ஆரண்யகம் என்பது காட்டில் செய்யப்படும் யாக , யக்னங்களை அடிப்படையாக கொண்ட , தியானத்துடன் கூடிய உபாசனைகளை விளக்குகின்றன. தத்துவங்களை ஆராய்ந்து , விளக்கங்கள் தருபவை உபநிடதங்கள். இந்த பிரபஞ்சம் , அதற்கு ஆதராமான பேருண்மை, மனித இயற்கை, வாழ்கையின் குறிக்கோள், அதை அடைவது எப்படி என்பவையெல்லாம் அவற்றில் அடங்கும்.

************

Read Full Post »

சுவாமி விவேகானந்தரும் சீடர்களும்

சுவாமி விவேகானந்தரும் சீடர்களும் உரையாடிக்கொண்டிருந்தார்கள்.
சீடர்: ‘சுவாமி, நானே பிரம்மம் என்றால் நான் ஏன் அதை எப்போதும் உணர்வதில்லை?”
சுவாமி விவேகானந்தர் “உணர்வு நிலையில் அதை அடைய வேண்டுமானால் ஒரு கருவி தேவை. மனமே அந்தக் கருவி. ஆனால் அது ஜடப்பொருள். பின்னால் இருக்கும் ஆன்மாவின் உணர்வினால் அதுவும் உணர்வுடையது போல் தோன்றுகிறது. அதனால் தான் பஞ்சதசியின் ஆசிரியர் “சிச்சாயாவேசத: சக்திச் சேதனேவ விபாதிஸா’- அதாவது உணர்வுப் பொருளான ஆன்மாவின் நிழல் அல்லது பிரதிபலிப்பால் தான் சக்தி அறிவுள்ளது போல் தோன்றுகிறது’ என்று கூறுகிறார்.
அது போல் நம் மனமும் உணர்வுடையது போல் காட்சி அளிக்கிறது. ஆகவே உணர்வின் சாரமாக இருக்கும் ஆன்மாவை மனத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியாது என்பது உறுதி. ஆன்மாவை அறிய நீ மனத்திற்கு அப்பால் செல்ல வேண்டும்.
மனத்தைக் கடந்து வேறு எந்த ஒரு கருவியும் இல்லை. ஆன்மா மட்டுமே இருக்கிறது. அதாவது அங்கே எதை அறிவாயோ அதுவே கருவியின் இடத்தைப் பிடித்துக் கொள்கிறது. அறிபவன், அறிவு, அறியும் கருவி எல்லாம் ஒன்றாகி விடுகின்றன. அதனால் தான் வேதங்கள், ‘அறிபவனை எதனால் அறிவது?’ என்று கேட்கின்றன.
உண்மை என்னவென்றால் உணர்வு நிலைக்கு அப்பால் ஒரு நிலை உள்ளது. அங்கு அறிபவன், அறிவு, அறியும் கருவி என்று எதுவும் இல்லை. மனம் ஒடுங்கும்போது அந்த நிலை உணரப்படுகிறது. ‘உணரப்படுகிறது’ என்று தான் நான் சொல்கிறேன். ஏனென்றால் அந்த நிலையை உணர்த்த வேறு வார்த்தைகள் இல்லை. அனுபவமே தீர்வு.
மேலும் உணர்வுகள் அனுபவிக்கும் பயத்தைப் பற்றி விவேகனந்தர் இப்படிச் சொல்கிறார்.
இன்பத்தில் இருப்பது நோயின் பயம்
உடலில் இருப்பது சாவின் பயம்
உயர் பிறப்பில் சாதி இழத்தலில் பயம்
பணத்தில் இருப்பது கொடுங்கோலின் பயம்
பலத்தில் இருப்பது பகைவர் பயம்
மதிப்பில் அதை இழத்தலின் பயம்
அழகில் இருப்பது மூப்பின் பயம்
குணத்தில் இருப்பது வசையின் பயம்
வாழ்க்கையில் இருப்பது எல்லாம் பயம்
துறவில் தானே பயமே இல்லை!
–சுவாமி விவேகானந்தா …

Read Full Post »

சீதையின் பொறுமை

 

இலங்கை அசோகவனத்தில் ராவணனால் சிறைவைக்கப்பட்டிருந்த சீதையைக் கண்டு ராமன் அனுப்பிய செய்தியை அனுமன் சொன்னான். பின்னர், அங்கிருந்த அரக்கியர் கூட்டத்தைக் குறிப்பிட்டு, தேவி, உன்னைப் பயமுறுத்திய இவ்வரக்கியரை நான் கொல்ல நீ அனுமதிக்க வேண்டும். இவர்கள் கொடுமையே உருவானவர்கள். இராவணனுடைய ஆணையால் மட்டுமல்ல; இவர்களுக்கு இயற்கையாக உள்ள கொடுமைக்குணம் உன்னைத் துன்புறுத்த இவர்களைத் தூண்டியது. இவர்களைத் தண்டிக்க வேண்டும். காது, மூக்கை, அறுக்க கீழே வீழ்த்தி உதைக்க வேண்டும் எனக்கு அனுமதி தா! என்றான். அனுமனின் இந்தக் கோரிக்கையை சீதை சற்றும் எதிர்பார்க்கவில்லை அவள் திரிசடையின் தலையீட்டால் முன்பே அரக்கியருக்கு சரண் தந்துள்ளாள். இப்போது சீதை அபலைகளை நான் மன்னித்து விட்டேன். அவர்கள் தவறே புரிந்திருப்பினும், நீயும் நானும் ஏன் அவர்களுக்கு தீங்கு இழைக்க வேண்டும், என்று கூறிவிட்டு ஒரு கதையை அனுமனுக்குக் கூறினாள்.

ஒரு புலி வேடனைத் துரத்திக்கொண்டு போயிற்று. வேடன் அருகில் இருந்த மரத்தில் ஏறிக் கொண்டான். அதற்கு முன்பே, மரத்தின் மீது ஒரு கரடி இருந்தது.  புலி கரடியிடம் கூறிற்று: இவ்வேடன்: நமது மிருக குலத்துக்கே பகைவன்; இவனைக் கீழே தள்ளி விடு! இருக்கலாம் ஆனால், இவன் நான் இருந்த மரத்தை அண்டியதால் என்னிடம் சரண் புகுந்தவன் ஆகிறான். சரண் அடைந்தவனைக் கைவிட மாட்டேன் இவ்வாறு சொல்லிவிட்டு கரடி உறங்கிற்று. சற்று நேரம் கழித்து புலி வேடனிடம் கூறிற்று: எனக்கு பசியாக இருக்கிறது. நீ அந்தக் கரடியைக் கீழே தள்ளிவிட்டால், நான் அதை உண்டு பசியாறி உன்னை விட்டு விடுகிறேன்.

வேடன் கரடியைத் தள்ளிவிட்டான் கரடியோ மரத்தின் கீழ்க் கிளை ஒன்றைப் பிடித்துக் கொண்டு, விழாமல் தப்பி, மேலே ஏறிக் கொண்டது. அப்போது புலி கரடியிடம் சொன்னது. இந்த மனிதன் நன்றிகெட்டவன். சரண் அடைந்தவனைக் காப்பாற்றுவேன் என்ற உன்னையே தள்ளிவிட்டான். அவனை தள்ளிவிடு! அதற்கு கரடி சொன்னது: எவனோ ஒருவன் தன் ஒழுக்கத்தினின்று வழுவினான் என்பதற்காக நான் என் தர்மத்தைக் கைவிடக் கூடாது. இன்னமும் அவன் சரண் புகுந்தவனே. அவனைத் தள்ளுவது அறத்தினின்று நான் தவறியது ஆகும் என்று கூறி. வேடனைக் கீழே தள்ள மறுத்து விட்டது. துன்பம் இழைத்தவருக்குப் பதிலுக்குத் துன்பம் இழைத்துப் பழி வாங்குவது சாதாரண மனிதர்களின் இயல்பு. சான்றோர்கள் அப்படிப் பழிவாங்க சந்தர்ப்பம் கிடைத்தாலும், துன்பம் இழைக்க மாட்டார்கள். சீதையின் சொல் கேட்டு, மேனிசிலிர்த்து, நெகிழ்ந்து அவளை மீண்டும் கரம் கூப்பி வணங்கினான் அனுமன்.

Read Full Post »

முட்டாள் தினமும், முட்டாள் கொள்கையும்.

 

நம் முன்னோர்கள் காலத்தை இயற்கையின் ஓட்டத்தை அனுசரித்தே வகுத்துவைத்தனர்.இதற்கு இயற்கை கணிதமுறை என்று பெயர்.

 ஒரு நாள் என்பது பூமியின் ஒரு சுழற்சியின் காலம்.ஒரு சுழற்சி இரவு,பகல் என்ற இருபொழுது கூடியது.ஒரு இரவும் பகலும் சேர்ந்தது ஒரு நாள்.நாழிகை,மணித்துளிகள் என பல்வேறு அளவு கொண்டாலும் இரவும் பகலும் பூமியின் சுழற்சியால் ஏற்படுவது இயற்கையே. அதுபோல் ஒரு மாதம் என்பது பதினான்கு வளர்பிறை நாளும், பதினான்கு தேய்பிறை நாளும்,பௌர்ணமி மற்றும் அமாவாசை ஒரு நாட்களும் சேர்த்து மொத்தம் முப்பது நாட்கள் கொண்டது ஒரு மாதம். இது பூமியை சந்திரன் சுற்றும் காலஅளவு. இவ்வாறு பன்னிரு முறை சந்திரன் பூமியை சுற்றியாவாறே பூமியும் சந்திரனும் சூர்யனின் வட்டப்பாதையை கடப்பது ஒருவருடம் எனப்படுகிறது.இதுவும் இயற்கை கணிதமே!

 சூரியனின் நீள்வட்ட பாதையில் பூமி வடக்கிலிருந்து தெற்காக பயணிப்பது தட்சிணாஅயனம்(தெற்கு அல்லது கீழ் நோக்கிய வழி) என்றும்,(ஆடிமாதம் முதல் கார்த்திகை வரை ),தெற்கிலிருந்து வடக்காக பயணிப்பது உத்ராஅயனம் (வடக்கு அல்லது மேல் நோக்கிய வழி)என்றும் பொருள்படும்.(மார்கழி மாதம் முதல் ஆனி வரை.)

 சூரியனின் நீள்வட்ட பாதையில் இரவு பகலும் சரியாக உள்ள கால அளவு சித்திரை மாதம் மற்றும் ஐப்பசி மாதம் சரியாக இருப்பதால் கோடைத் துவக்கத்தையே ஆண்டின் முதற்பாகமாக கொள்வது உலக வழக்காகிற்று.

கிரேக்க நாகரிக்கத்தில் அப்போலோ என்ற சொல் சூரியனை குறிக்கும். ஏப்ரல் மாதம் ஆண்டின் துவக்கமாக கொண்டனர்.பல்வேறு நாகரீகத்திலும் இந்த இயற்கை கணிதத்தை ஒட்டியே ஆண்டின் துவக்கமாக ஏப்ரல் அமைந்தது.16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல் 1 இலேயேபுத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வந்தது.

 பின்னர் 1562ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார்.

 இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது. ஏனெனில் ஏசு கிறிஸ்து டிசெம்பர் மாதம் 25ஆம் பிறந்ததால் அதன்பிறகு கிறிஸ்து ஆண்டு கணக்கிடப்படுவதால் இனி ஜனவரியே மாதமே தொடக்கமாக கொள்ளவேண்டும்.ஏற்றுகொள்ளாதவர்கள் முட்டாள்கள் என்றழைக்கப்பட்டனர்.இதுவே முட்டாள்கள் தின பிறப்பின் ரகசியம்.

 இன்றும் வருடத்தின் கடைசியாக (year ending) மார்ச் 31

உள்ளதை நீங்கள் அறிவீர்கள்.

Read Full Post »