கடவுள் நமக்குத் தேவையா?
பாகம் 4:
பாகம் 4 இன் தொடர்ச்சி:
அன்பு, அன்பையே பிரதியாகத் தருகிறது. நீங்கள என்னை வெறுக்கீரிகள், நான் உங்களை நேசிக்கத் தொடங்கினாலும் நீங்கள் என்னை வெறுக்கலாம். ஆனால் நான் தொடர்ந்து அன்பு செலுத்தினால், ஒரு மாதத்திலோ ஓராண்டிலோ கண்டிப்பாக நீங்கள் என்னிடம் அன்பு காட்டவே செய்வீர்கள். இது மனஇயல் கண்ட உண்மை. மறைந்த கணவனை அன்புமிக்க மனைவி நேசிப்பதுபோல், நாம் இறைவனை நேசிக்க வேண்டும். அப்போது நாம் அவனைக் காண்போம். நூல்களும் சரி, விஞ்ஞானங்களும் சரி நமக்கு எதையும் கற்பிக்காது. நூல்களைப் படித்தால் கிளிப்பிள்ளைகள் ஆவோம்; நூல்களைப் படித்தால் யாரும் அறிஞராவதில்லை.அன்பைப் பற்றிய ஒரு வார்த்தையின் பொருளை ஒருவன் அறிந்தால் போதும், அவன் அறிஞானாகிறான். எனவே அன்பைப் பெரும் ஆசையை முதலில் வளர்க்க வேண்டும்.
‘கடவுள் நமக்கு தேவையா?’ இதனை நாள்தோறும் நம்மை நாம் கேட்டுக்கொள்வோம். மதத்தைப்பற்றிப் பேசும்போது, குறிப்பாக உயர்ந்த நிலையில் இருந்து கொண்டு மற்றவர்களுக்கு கற்பிக்கும்போது, இந்தக் கேள்வியைக் கேட்போம். பல நேரங்களில் நமக்கு நாமே, ‘கடவுள் எனக்குத் தேவை இல்லை, உணவுதான் தேவை’ என்றுதான் உணர்கிறோம். சிறிது உணவு கிடைக்காவிட்டால் நான் பைத்தியமாகிவிடுவேன். ஒரு வைரமாலை கிடைக்கவில்லை என்றால் பெண்களுள் பலருக்குப் பைத்தியம் பிடித்துவிடும். ஆனால் அதே ஆசையை, கடவுளை அடைவதற்கு அவர்கள் கொள்வதில்லை; உலகில் உள்ளதான ஒரே உண்மையை அவர்கள் உணர்வதில்லை. எங்கள் நாட்டில் ஒரு பழமொழி உண்டு—– ‘நான் வேடனாக இருந்தால், காண்டாமிருகத்தை வேட்டையாடுவேன். கொள்ளைக்கரானாக இருந்தால் அரசனின் பொக்கிஷத்தை கொள்ளையடிப்பேன். பிச்சைக்காரர்களிடம் களவாடுவதாலும், எறும்புகளை வேட்டையாடுவதாலும் என்ன பயன்?’ எனவே அன்பு செலுத்த விரும்பினால் இறைவனிடம் அன்பு செலுத்துங்கள். இந்த உலகைப் பற்றி நமக்கென்ன கவலை?
நான் ஒளிவுமறைவின்றிப் பேசுவேன், ஆனால் எல்லோருக்கும் நன்மையை விரும்புபவன். உங்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்ல விரும்புகிறேன். நான் உங்களைப் புகழ்ந்து பேச விரும்பவில்லை. அது என் வேலையும் அல்ல. நீங்கள் என் குழந்தைகள் போன்றவர்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்ல விரும்புகிறேன். இந்த உலகமே முழுப்பொய். உலகின் ஆச்சாரியர்கள் அனைவரும் இதை உணர்ந்துள்ளனர். கடவுளின் வழியாக அல்லாமல் இந்தப் பொய்யான உலகத்திலிருந்து தப்ப வேறு வழி இல்லை. அவரே நமது வாழ்க்கை லட்சியம். மாறாக இந்த உலகத்தை நமது லட்சியமாகக் காட்டுகின்ற கருத்துகள் அழிவையே தருபவை. இந்த உலகத்திற்கும், இந்த உடலுக்கும் உரிய பயனுண்டு; அதாவது இறைவனை அடைய ஒரு சாதனம் என்கிற இரண்டாம் பட்சச் சிறப்பு உண்டு. ஆனால் உலகமே லட்சியமாகிவிடக்கூடாது. துரதிர்ஷ்டவசமாக, அடிக்கடி நாம் உலகை லட்சியமாகக் கொண்டு , கடவுளைச் சாதனமாக கொள்கிறோம். மக்கள் கோயிலுக்கு சென்று ‘இறைவா! எனக்கு இவற்றையெல்லாம் தருவாய்! எம்பெருமானே, என் நோயைத் தீர்ப்பாய்!’ என்றெல்லாம் முறையிடுவதைக் காண்கிறோம். அவர்கள் ஆரோக்கியமான நல்ல உடலை விரும்புகின்றனர். அதைக் கொடுப்பதற்காக யாரோ ஒருவர் எங்கோ உட்கார்ந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டு, அவரிடம் சென்று பிரார்த்திக்கின்றனர். மதம் என்பதைபற்றி இத்தகைய கருத்தைக் கொண்டிருப்பதைவிட நாத்திகனாக இருப்பதே சிறந்தது.
நான் கூறியதுபோல் இந்த பக்திதான் மிக உயர்ந்த லட்சியம். பலகோடி ஆண்டுகளுக்குப் பிறகாவது நாம் இதை அடைவோமா, மாட்டோமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நமது மிக உயர்ந்த லட்சியமாக அதையே கொள்ள வேண்டும்; நமது புலன்களும் அந்த மிக உயர்ந்ததையே நாடும்படிச் செய்ய வேண்டும். அந்த அறுதி நிலையை அடைய முடியவில்லை என்றாலும் அதன் அருகிலாவது செல்ல வேண்டும். உலகின் வாயிலாகவும், புலன்கள் மூலமாகவும் படிப்படியாக நாம் இறைவனை அடையப் பாடுபட வேண்டும்.
—-சுவாமி விவேகானந்தர்……..
~~கடவுள் நமக்கு தேவையா? என்ற தலைப்பு முற்றிலும் முடிந்தது .~~